என்மனார்
இலக்கண ஆசிரியன் தன் இலக்கண நூலுள் முன்னோர்
கருத்துகளை வழிமொழியும் இடங்கள் சிலவற்றில் பயன்படுத்தும் என்ப, மொழிப முதலிய வடிவங்களுள்
என்மனார் என்பதும் ஒன்று. இவ்வடிவத்தைத் தொல்காப்பியர் தம் நூலுள் 73 இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
தொல்காப்பியத்தின் ஆறாவது நூற்பாவிலேயே இது இடம்பெற்றிருந்தும் சொல்லதிகாரத்தின்கண்
அமைந்த முதல்நூற்பா உரையில்தான் இச்சொல் குறித்த விளக்கங்களை எழுதியுள்ளனர்
உரையாசிரியர்கள். இவ்வடிவம் பற்றி உரையாசிரியர்கள் தம்முள் மாறுபட்ட கருத்தினராக உள்ளனர்.
என்மனார் என்பதன் பகுபத விளக்கம் குறித்த உரையாசிரியர்களது
வேறுபட்ட பார்வைகளை முன்வைத்து விவாதிக்கிறது இக்கட்டுரை.
என்மனார் என்னும் இவ்வடிவத்தை முதலில்
விளக்கியவர் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் நக்கீரரே. இவரது உரையினை இளம்பூரணரும்
யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் கல்லாடரும் அப்படியே தம் உரையினுள் எதிரொலித்துள்ளனர்.
என்மனார் என்பதற்கான உரையைக்கொண்டும், களவியலுரை ஏழாம் சூத்திரத்தில் ‘செலவினும்’ என்னும்
தொல்காப்பிய நூற்பாவிற்குத் தந்துள்ள விளக்கத்தைக் கொண்டும் இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும்
இளம்பூரணரும் ஒருவரே என்பார்
மு. இராகவையங்கார் (மு.வை. அரவிந்தன், 1995 : 193).
மு. இராகவையங்கார் (மு.வை. அரவிந்தன், 1995 : 193).
நக்கீரரும் யாப்பருங்கல விருத்தியுரைகாரரும்
இளம்பூரணருக்குக் காலத்தால் முற்பட்டவர்களெனினும் தொல்காப்பிய உரையாசிரியர் என்ற முறையில்
இளம்பூரணரே இங்கு முன்னிறுத்தப்படுகிறார். இளம்பூரணரின் கருத்துப்படி என்ப என்னும்
முற்றுச்சொல்லின் திரிந்த வடிவமே என்மனார் என்பதாகும். என்ப என்னும் முற்றுச் சொல்லின்
ஈற்றில் நின்ற பகரம் குறைக்கப்பட்டதும் பின்னர் அதனோடு மன், ஆர் என்னும் இரண்டு இடைச்சொற்கள்
இணைக்கப்பட்டதும் செய்யுளின்பம் கருதிச் செய்யப்பட்டவை. இளம்பூரணர் கருத்தைப் பின்வரும்
வாய்பாட்டில் அமைக்கலாம்: என்ப> என்+மன்+ஆர்= என்மனார்.
என்ப என்னும் முற்றுச்சொல்லின் பகரம் செய்யுளின்பம்
கருதிக் குறைக்கப்பட்டுப் பின்னர் அதனோடு மன், ஆர் என்னும் இரண்டு இடைச்சொற்களை இணைக்க
வேண்டியிருப்பின் முன்னர்ப் பகரம் குறைக்கப்பட்டதால் ஒரு பயனும் இல்லாமையால் அவ்வாறு
எழுதிய உரை பிழையானது என்னும் காரணத்தைக் காட்டி இளம்பூரணர் உரையை மறுக்கிறார் தெய்வச்சிலையார்.
தெய்வச்சிலையாரின் இம்மறுப்பிற்கு, குறைப்பதும்
விரிப்பதும் செய்யுளின்பம் கருதியே. எனவே குறைத்த ஒன்றிற்குப் பதிலாக இரண்டினை விரித்துக்கொள்வதால் இசையின்பமோ செய்யுளின்பமோ மிகும் எனில் அத்தகைய
குறைப்பும் விரிப்பும் பயனுடையதேயாகும் என அமைதி கூறுகின்றார் சிவலிங்கனார் (1982
: 51 - 52).
மற்றொரு உரையாசிரியரான சேனாவரையர் தம்
உரையில், இரு காரணங்களைக் கூறி இளம்பூரணரை மறுக்கிறார். ‘என்ப என்னும்
முற்றுச் சொல்லினது பகரம் குறைத்து மன்னும் ஆரும் என இரண்டு இடைச்சொல் பெய்து விரித்தார்
என்று உரையாசிரியர் கூறினாராலெனின் என்மனார் என்பது இடர்பட்டுழிச் சிறுபன்மை வாராது
இந்நூலுள்ளும் சான்றோர் செய்யுளுள்ளும் பயின்று வருதலானும்’ (சொல். 1, சேனா.) என்பதே
சேனாவரையரது முதல் மறுப்பு. அதாவது என்ப என்னும் முற்றுச் சொல்லின் இறுதியில் உள்ள
பகரம் குறைக்கப்பட்டு பின்னர் அதனோடு ‘மன்’, ‘ஆர்’ என்னும் இரண்டு இடைச்சொற்கள் இணைத்துத்
திரிசொல்லாக அமைக்கப்படும் ஒரு சொல் மிகுதியான இடங்களில் பயின்று வராது என்பதே சேனாவரையர்
கருத்து. சேனாவரையர் கூற்றும், தொல்காப்பியம் இறையனார் களவியல், யாப்பருங்கலம், தமிழ்நெறிவிளக்கம்
உள்ளிட்ட இலக்கண நூல்களுள்ளும் குறுந்தொகை (234:3), கலித்தொகை
(119:16)
உள்ளிட்ட இலக்கியங்களுள்ளும் இச்சொல் பயின்று வந்துள்ளமையும் என்மனார் என்பது திரிசொல்
அன்று என்ற சேனாவரையரது கருத்திற்கு அரணாகின்றன.
இளம்பூரணருக்கு எதிராகச் சேனாவரையர் முன்வைக்கும்
இரண்டாவது மறுப்பு ‘இசைநிறை என்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார். பின்னும் இசைநிறை
என்பது மேற்கோள் மலைவாகலானும் அவர்க்கது கருத்தன்றென்க’ (சொல். 1, சேனா.) என்றவாறு
அமைந்துள்ளது. அதாவது மன் என்னும் இடைச்சொல் குறிக்கும் பொருளாகக் கழிவு, ஆக்கம், ஒழியிசை
என்னும் மூன்றினை மட்டுமே தொல்காப்பியர் குறித்துள்ளார்.
கழிவே
ஆக்கம் ஒழியிசை கிளவியென்று
அம்மூன்று என்ப மன்னைச் சொல்லே. (சொல். 252, சேனா.)
எனவே
என்மனார் என்ற சொல்லின்கண் வந்த மன் என்னும் இடைச்சொல் குறிக்கும் பொருள் இசைநிறை என
இளம்பூரணர் கொண்டது தொல்காப்பியர் கருத்திற்கே முரணாகிறது; மேற்கோள் மலைவாகிறது.
தொல்காப்பிய இடையியலின் இறுதியில் தொல்காப்பியர்
அமைத்துள்ள
அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென
. . . . . .
. . .
திரிந்துவேறு படினுந் தெரிந்தனர்
களலே (சொல். 295, சேனா.)
என்னும்
புறனடை நூற்பாவிற்கு ‘மேற்கூறப்பட்ட இடைச்சொற்கள் அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென
நிலைபெறச் சொல்லப்பட்ட இயல்பை உடையனவாயினும், வினையொடும் பெயரொடும் ஆராய்ந்து உணரத்தோன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் திரிந்துவரினும்
ஆராய்ந்து கொள்க’ (சொல். 295, சேனா.) என்றவாறு
உரைசெய்துள்ளார் சேனாவரையர். மேலும், அந்நூற்பா உரையிலேயே ‘அதுமற் கொண்கன் றேரே என
மன் அசைநிலையாயிற்று பிறவு மன்ன’ எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த எடுத்துக்காட்டின்வழி
‘மன்’ என்னும் இடைச்சொல் அசைநிலைப் பொருளில் வந்துள்ளதாகக் குறித்துள்ளார் சேனாவரையர்.
‘மன்’ என்னும் இடைச்சொல்லிற்குத் தொல்காப்பியர் சுட்டாத அசைநிலைப்பொருள் இருக்குமாயின்
இசைநிறைப்பொருளும் இருப்பதில் தவறில்லையே என்கிறார் சிவலிங்கனார் (1982: 53). இதன்படி
என்மனார் என்பதில் உள்ள ‘மன்’ என்னும் இடைச்சொல் இசைநிறைப்பொருளில் வந்துள்ளதாக இளம்பூரணர்
கொண்டது மேற்கோள் மலைவாகாது என்பதை விளக்கியுள்ள சிவலிங்கனார், சேனாவரையரின் முதல்
மறுப்பிற்கு எந்த விளக்கத்தையும் முன்வைக்கவில்லை.
மேற்கண்டவாறு சேனாவரையரும் தெய்வச்சிலையாரும்
என்ப என்னும் முற்றுச்சொல்லின் திரிந்த வடிவமே என்மனார் என்னும் வடிவம் என்ற இளம்பூரணர்
உரையினை மறுத்துள்ளனரே தவிர என்மனார் என்ற வடிவம் குறித்துத் தனியாக விளக்கவில்லை.
சிவஞான முனிவர் தம் சிவஞானமாபாடியத்துள் ‘என்மனார் என்பது செய்யுள் முடிபாயதோர் ஆரீற்று
முற்றுச்சொல். மன் எதிர்காலவிடைநிலை. அது உயர்திணையென்மனார் மக்கட் சுட்டே என்னும்
சூத்திரத்துச் சேனாவரையர் உரையானும் அறிக’ (சிவஞானபோதம் 1, சிவஞான மாபாடிய உரை) என்கிறார்.
இவ் உரையின்படி சேனாவரையர் மன் என்பதை எதிர்கால இடைநிலையாகக் கொண்டார் என்பது தெளிவாகியுள்ளது.
எனவே சேனாவரையரது கருத்துப்படி என்மனார் என்பது என் + மன்
+ ஆர் என அமைகிறது.
நச்சினார்க்கினியர் இதனை ஆர் ஈற்று நிகழ்கால
முற்றுவினைத் திரிசொல் என்கிறார். மன் என்பது வினைபற்றிய அசைநிலை இடைச்சொல்லாக நின்றது
என்பதே அவர் கருத்து (என் + மன் + ஆர்) மன் என்பது இளம்பூரணர் கருத்துப்படி செய்யுளின்பம்
கருதி இணைக்கப்பட்ட ஒரு இடைச்சொல். நச்சினார்க்கினியருக்கு அது வினைபற்றிய அசைநிலை
இடைச்சொல்.
தொல்காப்பியப் பழைய உரையாசிரியர்களின்
கருத்துகளை அடியொற்றி என்மனார் குறித்து ஒரு
முழுமையான முடிவிற்கு வர முடியாத நிலையில் இக்காலத் தமிழ் அறிஞர்கள் சிலரும் இச்சொல்
குறித்து ஆய்வு செய்துள்ளனர். அவர்களுள் மா. இளையபெருமாள்,
மு. வரதராசன், மோ. இசரயேல், ஆ. சிவலிங்கனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிவலிங்கனார், இளம்பூரணருக்கு எதிராகத் தெய்வச்சிலையார் கூறிய மறுப்பிற்கும் சேனாவரையர் கூறிய மேற்கோள்மலைவிற்கும் விளக்கமளித்துள்ளாரே தவிர என்மனார் குறித்து விளக்கவில்லை. அவ்வாறு விளக்காததால் சிவலிங்கனாரும் இளம்பூரணர் கருத்தினரே என்ற முடிவிற்கும் வர இயலாது. மாறாக இளம்பூரணர் கருத்தினரே என்றால் சிவலிங்கனாரும் என்மனாரைத் திரிசொல்லாகக் கொண்டவராகிறார். அவ்வாறு திரிசொல்லாகக் கொள்வதும் கேள்விக்குறியாகிறது. சிவலிங்கனார் தவிர்த்த ஏனைய தற்கால அறிஞர்கள் கருத்துகளின் வழி என்மனார் என்பது என்+ம்+அன்+ஆர் எனப் பகுக்கப்படுகிறது. இவற்றுள் ‘என்’ என்பது வினையடி; ‘ம்’ என்பது கால இடைநிலை (எதிர்காலம்); ‘அன்’ என்பது சாரியை; ‘ஆர்’ என்பது பலர்பால் படர்க்கை விகுதி. இதில் ‘என்’ என்ற வினையடியும் படர்க்கை பலர்பால் விகுதியாகிய ‘ஆர்’ என்பதும் எல்லா உரையாசிரியர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. எஞ்சியிருக்கும் மகரமெய் கால எழுத்து (கால இடைநிலை) என்பதும் ‘அன்’ சாரியை என்பதும் தெளிவாகிவிட்டால் என்மனார் என்பதும் தெளிவாகிவிடும்.
மு. வரதராசன், மோ. இசரயேல், ஆ. சிவலிங்கனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிவலிங்கனார், இளம்பூரணருக்கு எதிராகத் தெய்வச்சிலையார் கூறிய மறுப்பிற்கும் சேனாவரையர் கூறிய மேற்கோள்மலைவிற்கும் விளக்கமளித்துள்ளாரே தவிர என்மனார் குறித்து விளக்கவில்லை. அவ்வாறு விளக்காததால் சிவலிங்கனாரும் இளம்பூரணர் கருத்தினரே என்ற முடிவிற்கும் வர இயலாது. மாறாக இளம்பூரணர் கருத்தினரே என்றால் சிவலிங்கனாரும் என்மனாரைத் திரிசொல்லாகக் கொண்டவராகிறார். அவ்வாறு திரிசொல்லாகக் கொள்வதும் கேள்விக்குறியாகிறது. சிவலிங்கனார் தவிர்த்த ஏனைய தற்கால அறிஞர்கள் கருத்துகளின் வழி என்மனார் என்பது என்+ம்+அன்+ஆர் எனப் பகுக்கப்படுகிறது. இவற்றுள் ‘என்’ என்பது வினையடி; ‘ம்’ என்பது கால இடைநிலை (எதிர்காலம்); ‘அன்’ என்பது சாரியை; ‘ஆர்’ என்பது பலர்பால் படர்க்கை விகுதி. இதில் ‘என்’ என்ற வினையடியும் படர்க்கை பலர்பால் விகுதியாகிய ‘ஆர்’ என்பதும் எல்லா உரையாசிரியர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. எஞ்சியிருக்கும் மகரமெய் கால எழுத்து (கால இடைநிலை) என்பதும் ‘அன்’ சாரியை என்பதும் தெளிவாகிவிட்டால் என்மனார் என்பதும் தெளிவாகிவிடும்.
அவற்றுள்
செய்யும் என்னும் பெயரெஞ்சு
கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை
யுகரம்
அவ்விடனறிதல் என்மனார் புலவர். (சொல்.
238, சேனா.)
என்னும்
நூற்பா உரையில் சேனாவரையர், ‘செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசை உகரம்
மெய்யொடும் கெடும். எனவே செய்யும் என்னும் முற்றுச்சொற்கு ஈற்றுமிசை உகரம் மெய்யொடும்
கெடும்; மெய்யொழித்தும் கெடும் என்பதாம் (எ-டு) ‘அம்ப லூரு மவனொடு மொழிமே’ (குறுந்தொகை
51), ‘சார னாட வென் றோழியுங் கலுழ்மே’ என வரும்
பிறவுமன்ன (சொல்.238, சேனா.) என்றவாறு உரைசெய்துள்ளார். இதன்படி, செய்யும் என்னும்
வாய்பாட்டு முற்றுச்சொல்லில் இடம்பெற்ற உகரம் கெடும் இடங்களில் (உகரம் கெடாது வரும்
இடங்களே பெரும்பான்மை) மெய்யுடன் சேர்ந்து கெடுதல், தான் மட்டும் கெடுதல் என்ற இரண்டு
நிலைகளிலும் கெடும் எனத் தெரிகிறது. இதனையே,
செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய்
சேறலும்
செய்யுளு ளும்முந் தாகலு முற்றேல்
உயிரு முயிர்மெய்யு மேகலு
முளவே (நன்னூல். 340)
என்னும்
நூற்பாவிற்கு எழுதிய உரை வழி மயிலைநாதரும் உறுதிப்படுத்துகிறார்.
இடைச்சொற்கள் குறித்து ஆய்வு செய்த மோ.
இசரயேல் ‘மகரமே எதிர்காலக்குறி என்றும் உகரம் துணை ஒலியென்றும் கருதுவது தவறாகாது’
(1977 : 54-55) எனக் கூறும் கருத்து இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ‘நாணுக் குறைவில் அந்நங்கை
மற்று என்மரும்’ (பரிபா. 12:49) என்பதில் உள்ள ‘என்மர்’ என்பதும், ‘அள் இலைத் தாளி
கொய்யுமோனே’ (புறநா. 252:3) என்பதில் உள்ள ‘கொய்யுமோனே’ என்பதும் முறையே உகரம் கெட்ட
மற்றும் கெடாமல் வந்த இடங்களுக்கான சான்றுகளாகும். இதன்வழி மகரமெய் எதிர்காலம் குறித்து
வந்த கால எழுத்து என்பது தெளிவாகிறது. ‘செய்யும்- நிகழ்வெதிர்வும்’ (நன்னூல். 145)
என்னும் நன்னூலாரின் கருத்தும் இதற்கு அரணாகிறது. மேற்கண்ட விளக்கங்களின்வழி என்னும்
+ அர் என்பதே உகரம் கெட்டு என்மர் என்றாகியுள்ளது. கொய்யும் + ஓன் என்பது உகரம் கெடாமல்
கொய்யுமோன் என வந்துள்ளது. இவ்வமைப்பை என்மனார் என்ற வடிவத்திற்கும் பொருத்திப்பார்க்க
முடியும். என்மர், கொய்யுமோன் என்னும் சொற்கள் செய்யும் வாய்பாட்டு முற்றுச்சொல் +
திணை எண் பால் காட்டும் விகுதி என்ற அமைப்பில் உள்ளன. ஆனால் என்மனார் என்பதில் ‘அன்’
என்னும் சாரியை இடையே வருகிறது.
இனி ‘அன்’ என்பது சாரியை என்பதனை என்றிசினோர்,
கண்டிசினோர் என்பன முதலாயின அவ்வாறு வந்த இறந்தகால முற்றுச்சொல் என்னும் சேனாவரையர்
கூற்றின் வழியே பெறலாம் (என்றிசினோர் = என் + ற் + இசின் + ஓர். என் - வினையடி; ற்
- கால இடைநிலை; இசின் - சாரியை; ஓர் - படர்க்கைப் பலர்பால் விகுதி). இதன்வழி என்மனார்
என்பதிலும் ஒரு சாரியை இடம்பெற்றுள்ளது என்பது பெறப்பட்டுகிறது. எனவே, என்மனாரில் உள்ள
அன் என்பதைச் சாரியையாகக் கொள்வதில் தவறில்லை (மா இளைய பெருமாள், 1964 : 63). ஆனால் அன் சாரியைக் குறில்
எழுத்தில் தொடங்கும் அன், அள், அர் என்பன போன்ற விகுதிகளுடன் மட்டுமே வரும். எனவே என்மனாரில்
உள்ள அன் என்பது சாரியை அன்று என மறுக்கிறார்
மா. அய்யாச்சாமி. (1982) அவரே என்மனார் என்பதை, என்னும் + அன்னார் எனப் பகுக்கிறார்.
தமிழ்நெறி விளக்கத்தில் மூன்று இடங்களிலும் தொல்காப்பியத்துள் ஐந்து இடங்களிலும் மட்டுமே
என்மனார் என்னும் சொல் நூற்பா இறுதியில் பயின்று வந்துள்ளது. மற்ற இடங்களில் பெரும்பாலும்
புலவர் என்ற பெயர் தொடர்ந்து வரப்பெற்றே அமைந்துள்ளது. ‘என்மனார் புலவர்’ என்னும் சொற்களின்
இணைவில் இருக்கும் இசைவு அல்லது நயம் ‘என்னும் அன்னார் புலவர்’ என்பதில் இருப்பதாகத்
தோன்றவில்லை.
சங்க இலக்கியங்களில் இரண்டிடங்களைத் தவிர,
என்மனார் என்னும் இவ்வடிவம் இலக்கண நூல்களிலேயே பயின்று வந்துள்ளது. குறிப்பாகத் தொல்காப்பியத்துள்தான்
அதிகமாக இடம்பெற்றுள்ளது. என்மனார் என்பதற்கான பாடபேதமும் தொல்காப்பியத்துள் இல்லை.
மேலும் என்மனார் போன்ற அமைப்பில் மொழிமனார் என்ற ஒரு வடிவம் மட்டுமே அமைந்துள்ளது.
அதுவும் தொல்காப்பியத்துள் மூன்று இடங்களில் மட்டுமே வந்துள்ளது. இவ்வாறு இலக்கண நூற்களில்
மட்டும் பெரும்பான்மை பயின்று வந்துள்ளமையும் வேறு விகற்ப வடிவங்கள் இல்லாமையும் பாடபேதமின்றி
அமைந்துள்ளமையும் என்மனார் என்பது இலக்கண மொழிக்காக அமைக்கப்பட்டதையே காட்டுகிறது.
இலக்கணங்களில் கையாளப்பட்டுள்ள மொழி வழக்கு
என்பது பெரும்பாலும் இயல்பான மொழி வழக்கிலிருந்து மாறிய தன்மையையுடைய கருவிமொழியிலேயே
அமைகின்றது. காட்டாக, ‘ணனவல் லினம் வரட் டறவும் பிறவரின்’ (நன். 208) என்னும் நன்னூல்
நூற்பாவில் வர என்னும் செய வாய்பாட்டு வினையெச்சத்தினை அடுத்து வந்துள்ள ‘டறவும்’ என்பதில்
தம்பெயரைச் சுட்ட வந்த டகர, றகரத்தினை, டகர மொழிமுதல் சொல்லாகக் கொண்டு டகர ஒற்றினைப்
புணர்ச்சியில் மிகுத்திருப்பதை காணமுடிகிறது. இவ்வாறான இடங்களைக் காண ஆர் விகுதியின்
முன் அன் சாரியை வந்துள்ள என்மனார் என்னும் இவ்வடிவத்தையும் இலக்கண மொழிவழக்காகக் கருதினால்
ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த அடிப்படையில் என்னும் > என்ம்+அன்+ஆர் = என்மனார்
எனக் கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.
துணைநூற் பட்டியல்
- அரவிந்தன், மு.வை., 1995,
உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
- அய்யாச்சாமி, மா.,
1982, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற 14-ஆம் கருத்தரங்கு ஆய்வுக்கோவை,
தொகுதி 4,
- இசரயேல், மோ., 1977, இடையும்
உரியும், சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை.
- இளையபெருமாள், மா., 1964,
தமிழ் மொழிச்சிந்தனைகள், வஞ்சிநாடு பிரஸ், நாகர்கோவில்.
- கோபாலையர், தி.வே.
& அரணமுறுவல், ந. (ப-ர்), 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் (அனைத்து உரைகளும்),
தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
- சாமிநாதையர், உ.வே. (ப-ர்),
1937, தமிழ்நெறிவிளக்கம் பொருளியல் (பழைய
உரையுடன்), சென்னை.
- சாமிநாதையர், உ.வே. (ப-ர்),
1995, பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும் சென்னை.
- சாமிநாதையர், உ.வே. (ப-ர்),
1935, புறநானூறு மூலமும் உரையும், சென்னை.
- சிவஞான முனிவர், 1936, சிவஞானமாபாடியம்,
சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
- சிவலிங்கனார், ஆ. (ப-ர்),
1982, தொல்காப்பிய உரைவளம்; சொல்லதிகாரம்; கிளவியாக்கம், உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், சென்னை.
- பவணந்தி முனிவர், 1995,
நன்னூல், மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
- வரதராசன், மு., 1973, மொழியியற்கட்டுரைகள்
(முதற்பகுதி), பாரி நிலையம், சென்னை.
என்ம்+அன்+ஆர் என்பது என்மனார் எனில் அது குறிக்கும் காலம் நிகழ்காலமா? எதிர்காலமா?
ReplyDelete