அறியப்படாத தமிழ் உலகம் - தமிழ் உரிச்சொல் பனுவல்


முன்னுரை
            தொல்காப்பிய உரியியலில் தோன்றிய தமிழ்ச் சொற்பொருள் விளக்க மரபானது 9ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவாகரத்தின்வழி நிகண்டு என்னும் தனி வகையாகத் தமிழ் மரபில் நிலைபெற்றது. ஐரோப்பியர் வருகைக்குப் பின் அகராதி என்னும் வடிவம் தமிழ் மரபில் செல்வாக்கு பெற்ற பின்பும் தமிழில் நிகண்டுகள் உருவாக்கும் பணி நடைபெற்று வந்துள்ளதைக் காணமுடிகிறது. மன்னக் கல்வி முறைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்நிகண்டுகளிலிருந்து பெருமளவிலான தரவுகளைத் தொடக்க காலத் தமிழ் அகராதிகள் பெற்றுள்ளன. இருப்பினும் தமிழ் நிகண்டுகளில் உள்ள சொல்வளம் இன்னமும் தமிழுலகால் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. தமிழ்மொழியின் சொற்களஞ்சியங்களாக அமைந்திருக்கும் நிகண்டுகளில் மிக அண்மைக் காலத்தில் அதாவது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதி வெளியிடப்பட்டதான தமிழ் உரிச்சொற் பனுவல் என்னும் நிகண்டினை அறிமுகப்படுத்தும் வகையில் அமைகிறது இக்கட்டுரை.
தமிழ் உரிச்சொல் பனுவல்
            தமிழ் உரிச்சொற் பனுவல் என்னும் இந்நிகண்டு நூலினைக் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இராஜாக்கமங்கலம் என்னும் ஊரைச் சார்ந்த கவிராஜ பண்டிதர் இராமசுப்பிரமணிய நாவலர் என்பார் இயற்றியுள்ளார். இவரது மறைவிற்குப் பின் இவரது மகனார் திரு. ஆர். எஸ். மோகனராஜன் அவர்கள் இந்நிகண்டு நூலினை 1984 ஆம் ஆண்டில் நாவலர் அவர்களின் சொந்த பதிப்பகமான நாகர்கோவில் செந்தமிழ் நிலையம் வாயிலாக வெளியிட்டுள்ளார். இதனைத் தவிர்த்து வேறு எந்த பதிப்பையும் இந்நிகண்டு நூல் பெறவில்லை. இந்நிகண்டிற்கான முன்னுரையைத் தமிழ் நிகண்டுகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர் மு. சண்முகம் பிள்ளையவர்கள் செய்துள்ளார். பின்னிணைப்பாக நூற்பாக்களின் தலைச்சொல் அகரவரிசையையும் செய்து இணைத்துள்ளார்.
கவிராஜ பண்டிதர் இராமசுப்பிரமணிய நாவலர்
            நாவலரவர்கள் குமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் என்னும் ஊரில் 1906 ஆம் ஆண்டு சிவதாணுபிள்ளை - நாராயணி அம்மாள் தம்பதியருக்கு இளைய புதல்வராகப் பிறந்தார். தமது இளம் வயதிலேயே மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றார். மதுரைத் தமிழ்சங்கத்து ‘பண்டிதர்' பட்டமும், சென்னைப் பல்கலைகழகத்து ‘வித்துவான்' பட்டமும் பெற்றார், பாண்டித்துரைத் தேவர், இரா. இராகவய்யங்கார் உள்ளிட்டோர் பரிந்துரையின் பேரில் மதுரைத் தமிழ்ச் சங்கம் இவருக்கு நாவலர் பட்டம் கொடுத்து சிறப்பித்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சரிதத்தை எழுதியதன் பொருட்டு ஸ்ரீராமகிருஷ்ணமடம் இவருக்கு ‘கவிராஜர்' என்னும் பட்டத்தினைக் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. நாவலரவர்கள் தம் இருபத்தெட்டாம் வயதில் அரசுப்பள்ளியில் தமிழாசிரியராக அமர்ந்து 1962 வரை பணியாற்றினார்.
            திருச்செந்தூர் அந்தாதி, கலைசைச்சிலேடை வெண்பா உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள், இலக்கியக் கட்டுரை உள்ளிட்ட கட்டுரைகள், ஒளவையார் தனிப்பாடல் ஆராய்ச்சி உள்ளிட்ட ஆராய்ச்சி நூல்கள், நாஞ்சில் நாடு, ஸ்ரீராமகிருஷ்ணரின் திவ்விய சரிதப் பாடல் உள்ளிட்ட வரலாற்று நூல்கள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், Biochemistry, Diseases and Treatment உள்ளிட்ட மருத்துவ நூல்கள் எட்டினையும் எழுதியுள்ளார். இவற்றுள் பெரும்பாலானவற்றைத் தம் சொந்த பதிப்பகமான ‘செந்தமிழ் நிலையம்' வாயிலாக வெளியிட்டுள்ளார். நாவலரவர்கள் இயற்றிய நூல்களின் பட்டியில் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது. பெரிதும் தமிழுலகிற்கு அறிமுகமாகாத இப்பெரும் புலவர் 1981 ஆம் ஆண்டு தமது 76 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
தமிழ் உரிச்சொற் பனுவலின் அமைப்பு
தமிழில் தோன்றிய முதல் நிகண்டான திவாகரம் பின் வந்த நிகண்டு நூல்களுக்கு அடிப்படையாய் அமைந்திருந்தது என்பதை முந்தய இயலில் கண்டோம். அதற்கிணங்க இந்நிகண்டும் தொகுதிப் பெயர்களில் பெரிதும் திவாகரத்தை ஒத்த நிலையிலும், பொது அமைப்பில் பிங்கலத்தைப் பின்பற்றிய நிலையிலும் அமைந்திருக்கின்றது. மொத்தம் 7532 நூற்பாக்களில் அமைந்த இந்நிகண்டின்கண் அமைந்தவையாக,
            1. கடவுட் பெயர்த் தொகுதி
            2. மக்கட் பெயர்த் தொகுதி
            3. விலங்கின் பெயர்த் தொகுதி
            4. மரப்பெயர்த் தொகுதி
            5. பல்பொருட் பெயர்த் தொகுதி
            6. இடப்பெயர்த் தொகுதி
            7. பண்புப் பெயர்த் தொகுதி
            8. தொழிற் பெயர்த் தொகுதி
            9. ஒலிப்பெயர்த் தொகுதி
            10. ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி
என்னும் பத்து தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
            முதல் நான்கு தொகுதிகளும் திவாகர நிகண்டின் வரிசையிலேயே தமிழ் உரிச்சொற் பனுவலின் கண்ணும் அமைந்துள்ளன. திவாகரத்தின் ஐந்தாம் தொகுதியான இடப்பெயர்த் தொகுதியும் ஆறாம் தொகுதியான பல்பொருட்பெயர்த் தொகுதியும் இந்நிகண்டினுள் முறையே ஆறு மற்றும் ஐந்தாம் தொகுதிகளாக மாற்றம் பெற்றுள்ளன. திவாகரத்தின்கண் அமைந்த ஏழாவது தொகுதியானச் செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி தமிழ் உரிச்சொற் பனுவலில் தனியே இடம்பெறவில்லை. திவாகரத்தின் எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் தொகுதிகளானப் பண்பு பற்றிய பெயர்த் தொகுதி செயல் பற்றிய பெயர்த்தொகுதி, ஒலி பற்றிய பெயர்த் தொகுதி என்பன இங்கு முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் தொகுதிகளாக அமைந்துள்ளன. திவாகரத்தின் பதினொராம் தொகுதியான பல பொருள் ஒரு சொல் பெயர்த்தொகுதி இங்கு பத்தாம் தொகுதியாக்கப்பட்டுள்ளது. திவாகரத்தின்கண் பன்னிரண்டாவதாக தொகுதியாக அமைந்த பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி தமிழ் உரிச்சொற் பனுவலில் இடம்பெறவில்லை.
            தமிழ் உரிச்சொற் பனுவலின் முதல் ஒன்பது தொகுதிகள் ஒரு பொருட் பன்மொழி என்னும் அமைப்பிலும், பத்தாம் தொகுதி பலபொருள் ஒருசொல் என்னும் அமைப்பிலும் அமைந்துள்ளது. இவ்வமைப்பு பிங்கலம் உள்ளிட்ட நிகண்டுகளின் அமைப்பு வகையில் அடங்குகிறது.
அளவில் பெரிய உரிச்சொற் பனுவல்
இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நிகண்டுகளில் தமிழ் உரிச்சொற் பனுவலே மிகுதியான அளவில் நூற்பாக்களையும் சொற்றொகையையும் கொண்ட நிகண்டாக அமைந்துள்ளது. இதன்கண் அமைந்த பலபொருள் ஒரு சொல் பெயர்த்தொகுதி மிக விரிந்த நிலையில் 2050க்கும் மேற்பட்டப் பலபொருள் ஒருசொற்களை  தொகுத்தளித்துள்ளது. காலந்தோறும் சொற்களுக்கானப் பொருள்பரப்பில் ஏற்படும் பெருக்கத்தை இது உணர்த்துகின்றது. மேலும் இப்பலபொருள் ஒரு சொல் பெயர்த்தொகுதியில் இடம்பெற்றுள்ள சொற்கள் முழுமையும் அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்நிகண்டு நூலின் தனிச்சிறப்புக்களுள் தலையாயதாகும்.
தனித்தமிழ் வழக்கு
            தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்றுகொண்ட ஆசிரியர் நாவலரவர்கள் தாம் இயற்றிய நிகண்டு நூலிற்குத் தமிழ் உரிச்சொற் பனுவல் என்னும் தமிழ் வழக்கு நோக்கிய பெயரை அமைத்தது மட்டுமல்லாமல் நூற்பெயருக்கு ஏற்றாற் போல வடமொழிச சார்பாய் வந்த சொல் வடிவங்களை முற்றிலும் தவிர்த்துத தமிழ்ச்சொல் வடிவங்களையே தம் நூலுள் தொகுத்துள்ளார்.
இதனை,
            பிறமொழிச் சொற்களை நெறிப்பட நீக்கி
            தமிழுரிச் சொற்களின் றகுபொருள் விளங்கப்
            பைந்தமிழுரிச் சொற் பனுவல் தந்தனன்.
                                                (உரிச்சொற் பனுவல், தற்சிறப்புப் பாயிரம், 3.ப.1)
என்ற தற்சிறப்புப் பாயிர அடிகள் நன்கு உணர்த்துகின்றன.
            நிகண்டின் வடமொழிப் பெயர்கள் பலவும் தமிழ்வழக்கு நோக்கி மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தெய்வப் பெயர்த்தொகுதியில் நாவலரால் இம்முயற்சி பெரிதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘முகம்என்ற வடமொழிச் சொல்லிற்கு இணையாக ‘முன்னம்என்ற சொல் ஆசிரியரால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனை முன்னத்தோன் (நூ.12), ஆறு முன்னத்தோன் (நூ.13) இரண்டும் முறையே ஆனை முகத்தோன், ஆறு முகத்தோன் என்பனவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
            இருபத்தேழு நாட்கள் (நட்சத்திரங்கள்), பன்னிரு இராசிகள், பன்னிரு திங்கள்கள் போன்றவை அனைத்திற்குமான தமிழ்ப் பெயர்  வடிவங்களே நிகண்டினுள் ஆட்சி பெற்றுள்ளன. புத்தரைக் குறிப்பதற்குப் புத்தர் என்ற பெயர் பயன்படுத்தப்படாமல் அறிவன் என்ற பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தரைக் குறிப்பதற்குத் தொகுக்கப்பட்ட அனைத்து பெயர்களும் தமிழ் வழக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மற்ற நிகண்டுகளில், வடமொழிப் பெயர்களைத் தவிர்க்க முடியாமல் அமைக்கப்படும் தெய்வப் பெயர்த்தொகுதி போன்ற இடங்களும் இந்நிகண்டில் முழுவதும் தமிழ் வழக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
வட்டார வழக்குச் சொற்கள்
            தொல்காப்பியம் செய்யுள், வழக்கு என்ற இரண்டிற்குமான இலக்கணத்தை விளக்குவதாக அதன் சிறப்பு பாயிரம் கூறுகின்றது. இங்கு வழக்கு என்பது மக்களின்  பேச்சு மொழியைக் குறிக்கின்றது. இன்றைய மொழியியல் ஆய்வுகளிலும் மக்களின் பேச்சு வழக்கிற்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. அகராதிப் பரப்பிலும் வட்டார வழக்கு அகராதிகள் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன.
            இதற்கிணங்கத் தமிழ் உரிச்சொற் பனுவலிலும், தாம் பிறந்து வளர்ந்த பகுதியான நாஞ்சில்நாட்டின் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி) வட்டார வழக்குச் சொற்கள் பலவற்றினைப் பதிவு செய்துள்ளார் நாவலர். காட்டாக, வீட்டின் தாழ்வாரத்தை ‘இறப்பு (நூ.3243) என்றும், சோறு சமைத்தலை ‘வடித்தல் (நூ.4750) என்றும், முறத்தில் புடைத்தலை ‘நாவல் (நூ.4743) என்றும், அரிசியிலிருந்து குருணையை நிக்குதலைக் ‘கொழித்தல் (நூ.3839) என்றும், மூக்கடைப்பு நோயினைத் ‘தடுமம் (நூ.1207) என்றும் ஆண்டுள்ளமையைக் குறிப்பிடலாம். வட்டார வழக்கு குறித்த ஆய்விற்குரிய ஆவணமாக இதுபோன்ற பகதிகள் அமைநதுள்ளன.
ஒப்புமொழிப் பதிவுகள்
            நாவலரவர்கள் வாழ்ந்த பகுதியானது அவர் பிறந்து வளர்ந்த காலத்தில் கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டிருந்த்து. இதன் காரணமாகத் தன் பள்ளிப்படிப்பை மலையாளத்தில் மேற்கொண்ட நாவலர் தமிழுடன் மலையாளத்திலும் புலமை பெற்றிருந்தார். மலையாளப் புலமை, புவி சார்ந்து மலையாள மொழி பேசும் மக்களுடனான நெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் மலையாள மொழியில் தற்போது வழங்கிவரும் சொற்கள் சிலவும் இந்நிகண்டினுள் இடம்பிடித்துள்ளன. இச்சொற்கள் தமிழிலும் மலையாளத்திலும் முன்பு வழங்கிவந்து தற்பொழுது தமிழில் வழக்கொழிந்தனவாய் மலையாளத்தில் மட்டுமே வழங்கி வருவனவாய் உள்ளன.
            ‘களித்தல் (நூ.4627) விளையாடல் என்னும் பொருளிலும் ‘சீத்தை (நூ.4308, நூ.4301) கேடானது என்ற பொருளிலும் ‘கொதுகு (நூ.1478) கொசு என்ற பொருளிலும், தூக்கல் (நூ.3651) நிறுத்தல் அளவையில் அளத்தல் என்ற பொருளிலும், பறம்பு (நூ.2734) படுத்துறங்கப் பயன்படும் பாய் என்ற பொருளிலும் நிகண்டினுள் ஆளப்பட்டுள்ளன. இச்சொல் வடிவங்கள் யாவும் மேற்குறிப்பிட்ட அதே பொருளில் தற்காலத் தமிழ் வழக்கில் இல்லாமல் மலையாளத்தில் மட்டுமே வழங்கி வருகின்றன. பிற தமிழ் நிகண்டுகளில் வடமொழி செல்வாக்கு பெற்றிருக்க, இந்நிகண்டில் தமிழின் ஒப்பு மொழிகளுள் ஒன்றான மலையாளம் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகிறது.

சொல்லாக்க முயற்சிகள்
            ஒரு மொழியானது வளர்ச்சியடைந்து வரும் அறிவியல் துறைகளுக்கேற்ப புதிய கலைச்சொற்களைப் படைத்துக் கொள்ளவில்லை எனில் அம்மொழியின் வளர்ச்சியில் ஒரு தேக்கநிலை ஏற்படுவது தடுக்க முடியாததாகிவிடும். நிகண்டு ஆசிரியர்களும் இதுபோன்ற நிலையினைச் சிந்தித்துத் தம் காலத்து மொழிச் சூழலிற்கு ஏற்ப சில சொல்லாக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் இவர்களது முயற்சி என்பது ஏற்கனவே வழக்கில் இருக்கும் ஒரு சொல்லிற்கு இணையாக மற்றொரு சொல்லை உருவாக்குவதாகவே அமைந்துள்ளது. தமிழ் உரிச்சொற் பனுவல் நாவலரவர்கள் புதிய சொல்லாக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
ஊட்டி (நூ.5842) என்னும் சொல் உணவுக் குழாயின் தொடக்க இடத்தைக் குறிப்பதற்காக நிகண்டினுள் அமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கிலுள்ள சொல்லுக்குப் புதிய பொருள் சேர்ப்பதான சொல்லாக்க முயற்சியுள் அடங்குகிறது.
            ‘பறவை வேந்தன் (நூ.1416) என்னும் சொல் பக்ஷிராஜன் (கருடன்) என்னும் சொல்லிற்கு இணையாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்த்து அமைக்கப்படும் சொல்லாக்க முயற்சியுள் இது அமைகிறது.
            ‘தாயைக் கொன்றான் (நூ.2030) ‘கண்ணுறை (நூ.2238) இரு சொற்களும் முறையே வாழை மரத்தையும் உணவுப்பொருள் முதலியவற்றை ஈ உள்ளிட்டவை மொய்க்காமலிருக்க மூடி பாதுகாக்கப் பயன்படும் சிறுசிறு துளைகளைக் கொண்ட பொருளையும் குறிப்பதற்கு நாவலரவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் காரணம் கருதிப் படைக்கப்பட்ட கலைச்சொற்களைப் போன்று உள்ளன.
முழுநிலையில் அகர வரிசை
            பிங்கல நிகண்டிற்குப் பின்வந்த நிகண்டுகள் பயன்படுத்துவோரின் தேவை கருதிச் சில மாற்றங்களைத் தம் கட்டமைப்பில் மேற்கொண்டன. அவற்றுள் ஒன்று மனனம் செய்வதன் எளிமை கருதிச் செய்யப்பட்ட யாப்பு மாற்றம், மற்றொன்று குறுக்கு நோக்கீட்டிற்கு ஏற்ற வகையில் பலபொருள் ஒரு சொல் பெயர்த் தொகுதியை அமைக்க வேண்டும் என்ற அளவில் செய்த முயற்சிகள்.
            பலபொருள் ஒருசொல் பெயர்த் தொகுதிச் சொற்களை எளிதில் கண்டறிய வேண்டி, அத்தொகுதிச் செய்யுள்கள் எதுகை முறையில் அமைக்கப்பட்டன. சூடாமணி நிகண்டில் முதலில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி போதிய அளவில் பலனளிக்காத்தால் சொற்களைக் கண்டறிவதற்கு அகரவரிசை முறை முன்னெடுக்கப்பட்டது. முலெழுத்து அளவிலான அகர வரிசையோடு அகராதி நிகண்டிலும், இரண்டாம் எழுத்து வரையிலான அகரவரிசையோடு பொதிகை நிகண்டிலும் அமைக்கப்பட்ட பலபொருள் ஒரு சொல் பெயர்த்தொகுதி முழு அளவிலான அகரவரிசையோடு தமிழ் உரிச்சொற் பனுவலில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
            திவாகரம் உள்ளிட்ட ஒரு சில நிகண்டுகளில் அகரவரிசையோடு அமைந்துள்ள இப்பலபொருள் ஒருசொல் பெயர்த்தொகுதியை அந்நிகண்டுகளைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்களே அகர வரிசைக்கு உட்படுத்திப் பதிப்பித்துள்ளனர். (எஸ். வையாபுரிப்பிள்ளை, 1982 xxxiv)
தற்சிறப்புப் பாயிர விளக்கங்கள்
            நாலவரவர்கள் தாம் எழுதிய நூலிற்குத் தாமே சிறப்புப் பாயிரத்தையும் எழுதியுள்ளார். இதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 27 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூற்பாக்களை மட்டும் படைக்காமல் நூற்பாக்களினிடையே விரிவான விளக்கங்களையும் எழுதியுள்ளார் ஆசிரியர். காட்டாக,
            இடமும் பொருளு மிடமும் பண்பும்
            பண்பும் பொருளும் பண்பும் செயலும்
            ஒலியும் பண்பு மொலியுஞ் செயலும்
            இயைந்தொருங் கியலும் பொருள்படு மொழிகள்
            பலவிடத் துறினுந் தொகுதிக் கேற்பக்
            குறித்த பொருளுட் கோடல் வேண்டும்
                                                            (உரிச்சொற் பனுவல், தற்சிறப்புப் பாயிரம், 23)
கட்டில் என்பது படுப்பதற்குரிய இடமுமாம். பொருளுமாம் எனவே இடப்பெயர்த் தொகுதியிலோ பொருட்பெயர்த் தொகுதியிலோ  அவ்விரண்டிலுமோ கொள்ளப்படலாகும். இடப்பெயர்த் தொகுதியில் வரின் இடமாகவும், பொருட்பெயர்த் தொகுதியில் வரின் பொருளாகவும் கொள்ளப்படும். பிறவும் இவ்வாறு காண்க. (உரிச்சொற் பனுவல், தற்சிறப்புப் பாயிரம், 23, ப.4) இப்பகுதி ஒரே சொல் இரண்டு தொகுதிகளிலும் இடம்பெறும் வேளையில் அதனைப் படிப்போர்க்கு ஏற்படும் மயக்கத்தினைப் போக்கும் வித்த்தில் உள்ளது. இத்தற்சிறப்புப் பாயிரமும் விளக்கமும் தற்கால அகராதிகளின் முன்னுரைப் பகுதியில் குறிக்கப்பெறும் ‘பயன்ப டுத்துவோர் குறிப்பு ’ என்பதை ஒத்துள்ளன.
முடிவு
            தமிழில் வெளிவந்துள்ள நிகண்டுகளுள்இறுதியானதான தமிழ் உரிச்சொற் பனுவலில் அதன் ஆசிரியர், தன் நூலினைத் தனித்தமிழ் நடையில் அமைத்தல், வட்டார வழக்க, ஒப்பு மொழிச்சொற்கள் போன்றவற்றைச் சொல் தொகுப்பினுள் இணைத்துக் கொள்ளுதல், சொல்லாக்க முயற்சிகளை முன்னெடுத்தல், பலபொருள் ஒரு சொல் பெயர்த்தொகுதியை முழு அளவிலான அகர வரிசையோடு அமைத்தல், தற்சிறப்புப் பாயிரத்தை அமைத்த்தோடு அதில் நூல் எழுதியதன் நோக்கம், நூலைப் பயன்படுத்தும் முறை உள்ளிட்டவற்றை உரைநடையில் விளக்கியிறுத்தல் உள்ளிட்ட சில புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். தமிழ் மரபிற்கு ஏற்றவாறும் காலத்தோடு பொருந்தியும் அமைந்துள்ள இம்முயற்சிகள் பாராட்டத்தக்க முறையில் அமைந்துள்ளன.

துணைநூற்பட்டியல்
  1. இராம, சுப்பிரமணிய நாவலர், 1984, தமிழ் உரிச்சொற் பனுவல், செந்தமிழ் நிலையம், நாகர் கோவில்
  2. சண்முகம் பிற்றை, மு., 1982, நிகண்டு சொற்பொருட் கோவை தெய்வப்பெயர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
  3. சற்குணம், மா., 2002, தமிழ் நிகண்டுகள் ஆய்வு, இளவழகன் பதிப்பகம், சென்னை.
  4. சித்திரபுத்திரன், எச்., சொல்லும் பொருளும் (அகராதியியல் ஆய்வுகள்), அன்னம், தஞ்சாவூர்.
  5. மாதையன், பெ., தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  6. வையாபுரிப்பிள்ளை, எஸ். (ப- ர்), 1982. (மறுபதிப்பு), தமிழ்ப்பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.


Comments

Popular posts from this blog

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்