சொந்தம் கொண்டாடும் சொற்களுடன் புழங்கிய தருணம்


      2002 ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையில் முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்து ஓரிரு மாதங்களே ஆகியிருந்த காலம். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்ற நாள். திருவனந்தபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் கேரளப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் உள்ள பல்கலைக்கழகப் பேரவைக் கூட்ட அறையில் சொற்பொழிவிற்காகத் தமிழ்த்துறை மாணவர்கள் குழுமியிருந்தோம். ‘கைகோக்கும் சொற்களுக்கு ஓர் அகராதி’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்ற வந்திருந்தார் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள். அகராதி என்றால் சொற்களுக்குப் பொருள் தரும் நூல் என்ற பொதுபுத்தியில் உறைந்திருந்த என் போன்ற முதலாமாண்டு மாணவர்களுக்கு நிச்சயம் அந்தத் தலைப்பின் அர்த்தம் அந்த வேளையில் புலனாகவில்லை. ஆனால் தங்கள் முதுகலைப் பட்டத்தின் ஒரு பகுதியாகச் சொல்லடைவு தொடர்பான ஆய்வேட்டினை உருவாக்கிக்கொண்டிருந்த; பின் வரிசையில் அமர்ந்திருந்த முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கும், முதுகலை பட்டத்திற்காகவோ அல்லது இளநிலை ஆய்வு பட்டத்திற்காகவோ அதே சொல்லடைவு வேலையைச் செய்துமுடித்திருந்த முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் சொற்பொழிவாளரைப் பற்றியும் அவர் முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்து உருவாக்கிய க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியைப் (முதல் பதிப்பு) பற்றியும் நல்ல புரிதல் இருந்ததை அவர்களது உரையாடல் வெளிப்படுத்தியது.

      உறுதி பூண்பதா? உறுதி தரிப்பதா? வேடம் பூணலாம், வேடம் தரிக்கலாம் ஆனால் உறுதி என்ற பெயர்ச்சொல் பூணூதல் என்ற வினையை மட்டுமே ஏற்கிறது. உறுதி தரித்தார் எனக் கூற முடியவில்லை. வேடம் ஏன் பூண், தரி ஆகிய இரு வினைகளையும் ஏற்கிறது? உறுதி ஏன் பூண் என்ற வினையை மட்டும் ஏற்றுக்கொள்கிறது? என வினாக்களோடு தனது சொற்பொழிவைத் தொடங்கினார் பேராசிரியர் பா.ரா.சு. அவர்கள்.  ‘பூண்’ என்ற வினையும் ‘தரி’ என்ற வினையும் பொது நிலையில் ஒரே பொருளுடைய சொற்களாக நமக்குத் தோன்றினாலும் ‘உறுதி’ என்ற பெயர்ச்சொல்லோடு அவற்றை இணைத்துப்பார்க்கும் போது ‘பூண்’ என்ற வினை ‘உறுதி’ என்ற பெயர்ச்சொல்லோடு உறவாடிய நிலையைத் ‘தரி’ என்ற சொல் பெற்றிருக்கவில்லை என்பதை முதலில் உணர்த்திக்காட்டிய அவர் இதுபோன்று அமையும் மேலும் சில எடுத்துக்காட்டுகளையும் தந்து விளக்கினார். இதுவே ஆங்கிலத்தில் collocation என்றும் தமிழில் சொற்சேர்க்கை என்றும் அழைக்கப்படுகிறது என எடுத்துரைத்தபோதுதான் அவர் சொல்ல வருகிற செய்தி மெல்லப் புலனாகத்தொடங்கியது எங்களுக்கு.

      க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்து அப்பணியை முடித்திருந்த வேளையில், அந்த அகராதிப்பணிக்காகக் கணினியின் உதவியுடன் முறையாகத் தொகுக்கப்படிருந்த தரவுகளை வைத்துக்கொண்டு மேலும் சில வகை சிறப்பகராதிகளையும் தற்காலத் தமிழ்க் கல்விக்கு உதவும் வகையிலான கருவி நூல்களையும் உருவாக்கும் பணிகளை முன்னெடுப்பதற்காக ‘மொழி’ அறக்கட்டளை உருவாக்கப்பட்டிருந்தது. மொழி அறக்கட்டளையின் வழி உருவாக்கப்பட்ட தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, தமிழ் நடைக் கையேடு, சொல்வழக்குக் கையேடு ஆகிய நூல்களைத் தொடர்ந்து, வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியைப் பற்றித்தான் பா.ரா.சு. அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். தம்முடைய மனதில் கருக்கொண்டிருந்த அந்த அகராதியின் இயல்பினை அதன் பயன்களைப் பட்டியலிட்ட அந்தச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, அந்த அகராதியின் உருவாக்கப் பணியில் பணியாற்றப்போகிறேன் என்பது அன்று தெரிந்திருக்கவில்லை.

      விஷயத்திற்கு வருகிறேன். 2002 ஆம் ஆண்டு கருக்கொண்டு, மொழி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு, பாரதி புத்தகாலயத்தால் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி என்னும் இந்த அகராதியை அறிமுகப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் அகராதி வெளியிடப்பட்ட நாள் முதல் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அகராதி வெளிவந்த பின்னர் தினமலர் நாளிதளிலும் (ஜூன் 10, 2016), தி இந்து தமிழிலும் (பிப்ரவரி 18, 2017), கணையாழி இதழில் பேராசிரியர் இந்திரா பார்த்தசாராதி அவர்களாலும், புத்தகம் பேசுது (செப்டம்பர் 9, 2016) இதழில் பேராசிரியர் வீ.அரசு அவர்களாலும் இவ்வகராதி நன்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தனை நூல் அறிமுகங்கள் வந்துவிட்ட நிலையிலும், காலம் கடந்துவிட்ட நிலையிலும் அறிமுகம் செய்யவேண்டும் என்ற என் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன். இந்த நிலையில்தான் நெய்தல் ஆய்வின் 5 ஆம் இதழை அகராதிச் சிறப்பிதழாகக் கொண்டுவரும் வாய்ப்பு கிட்டியது. தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எனது ஆசையை, அகராதி உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த அனுபவங்களுள் சிலவற்றைக் கோர்த்து எழுதி நிறைவேற்றிக்கொள்கிறேன்.

      தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி உருவாக்கப் பணியானது இரண்டு காலகட்டத்தைக் கொண்டது எனச் சொல்வது பொருந்தும். முதல் காலகட்டமானது 2014 வரைக்குமானது அடுத்தது 2014 முதல் அகரதி வெளியிடப்பட்ட 2016 வரையிலுமானது. நான் பணி செய்தது முதல் காலகட்டத்தில். நான் சேரும் முன்பே முனைவர் மதுகேஸ்வரன் அவர்களும் முனைவர் இளமாறன் அவர்களும் ஒருவர்பின் ஒருவராகச் சிலகாலம் இப்பணியில் ஈடுபட்டுப் பின்னர் அப்பணியில் இருந்து விடுபட்டிருந்தார்கள். வீகாரத்தில் தொடங்கும் சொற்கள் வரை வேலைகள் முடிந்திருந்தன. பெயர்ச் சொற்கள் தலைச் சொற்களாக அமைக்கப்பட்டு அவை ஏற்கும் வினைகள் முதலிலும், தொடர்ந்து அப்பெயர்ச்சொற்களின் முன்னர் வரும் பெயர்கள் மற்றும் பெயரடைகள் அடுத்ததாகவும், அதனை அடுத்து அப்பெயர்ச் சொல்லுக்குப் பின் சேரும் பெயர்களும், இறுதியாக இருசொல் இணைகள் இருப்பின் அவையும் என அகராதிப் பதிவின் அமைப்பும் உருவாக்கப்பட்டிருந்தது.

      பணியில் சேர்ந்த முதல் நாளில் அகராதியின் அமைப்பை விளக்கிக்காட்டிய பா.ரா.சு. அவர்கள், ஓரிரு நாட்களுக்குத் தொகுத்து வைக்கப்பட்டிருந்த அகராதிப் பதிவுகளை ஊன்றிப் படிக்கச் சொல்லியிருந்தார்.  முதல் நாள் படித்து முடித்த சில பக்கங்களில் எனக்கு ஏற்பட்ட ஐயங்களை மாலையில் அவர் கிளம்புவதற்குச் சற்று நேரத்திற்குமுன் அவர் அமர்ந்திருக்கும் அறைக்குச் சென்று அவரிடம் வினவினேன். எனது ஐயங்கள் ஒவ்வொன்றையும் கேட்டு அதற்கான பதில்களைத் தந்த அவர், அகராதிப் பதிவுகளில் நான் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்ட சொற்சேர்க்கைகளுள் பொருத்தமான சிலவற்றை ஏற்றுக்கொண்டார், பலவற்றைத் தகுந்த காரணம்காட்டி நிராகரித்தார். ஓரிரு நாட்கள் இதுபோலவே தொடர்ந்தன. அதன் பின்னர் அதுவரையிலும் தொகுத்துவைக்கப்பட்டிருந்த அகராதிப் பக்கங்களைப் பார்த்துவிட்டு, மாலையில் அவருடன் விவாதிப்பதே எனது முதற்கட்ட பணியாக மாறியது.

சொற்சேர்க்கை இயல்பானது

      ஒவ்வொரு நாளும் விதவிதமான ஐயங்கள் வித விதமான வினாக்களுடன் அவரை சந்திப்பேன் அவர் விடைபெறும்போது ஓரளவிற்குத் தெளிவடைந்திருப்பேன். ஒரு சில வாரங்களில் சொற்சேர்க்கைகளின் இயல்பும் அகராதியில் பதிவாகும் தன்மையைப் பெற்ற சொற்சேர்க்கை எவை என்பதும் புரியத்தொடங்கின. ‘சொற்சேர்க்கைகளை இலக்கன விதிகளால் பெறமுடியாது. இலக்கண விதிகளால் பெறமுடியாதவை எல்லாம் பட்டியலிடப்படவேண்டியவை. கற்றுத்தெரிந்துகொள்ள வேண்டியவை’ என அவர் சொல்லத் தெரிந்துகொண்டேன்.

      உதாரணமாக, ‘பிழை’ என்பதும் ‘தவறு’ என்பதும் ஒரே பொருளை உணர்த்தும் வெவ்வேறு சொற்கள். பிழை, தவறு என இரண்டு பெயர்ச் சொற்களும் ‘செய்’ என்ற வினையோடு இயல்பாக இணைகின்றன. (எ-டு) அவன் பிழை செய்துவிட்டான். / அவன் தவறு செய்துவிட்டான். ஆனால் ‘இழை’ என்ற வினை தவறுடன் மட்டுமெ இணைகிறது. பிழையுடன் இணைந்து வருவதில்லை. அதுபோலவே அச்சுப்பிழை, இலக்கணப்பிழை, பிழைதிருத்தம் என பிழை வருகிற இடங்களில் தவறு என்பதை நாம் மாற்றாகக் கொள்ளமுடிவதில்லை. அவன் ஒரு தவறும் இழைக்கவில்லை, பிழைத் திருத்தம் என்பன இயல்பான சொற்சேர்க்கைகள். மாறாக, அவன் ஒரு பிழையும் இழைக்கவில்லை என்பதோ அல்லது தவறுத் திருத்தம் என்பதோ நெருடலாக அமைகின்றன. மனதில் நெருடல் உணர்வைத் தோற்றுவிக்கும் இணைகளை நாம் (தாய்மொழியாளர்கள்) இயல்பான சொற்சேர்க்கைகளாக ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறு இயல்பான சொற்சேர்க்கையினை உணர்ந்துகொள்ளமுடியாத; பிழை என்பதும் தவறு என்பதும் ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள் என்பதை மட்டும் தெரிந்துவைத்திருக்கும் பிறமொழியாளருக்கு இச்சொற்சேர்க்கை அகராதி உதவும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சொற்சேர்க்கையும் மரபுத்தொடர்களும்

      தலை என்னும் பதிவின்கீழ் ‘முழுகு’ என்னும் சொல் இல்லாமையை ஒருமுறை பா.ரா.சு. அவர்களிடம் சுட்டிக்காட்டினேன். மொழி அறக்கட்டளை உருவாக்கி வைத்திருக்கும் தரவுகளில் ‘தலை’ என்னும் சொல் இடம்பெறும் பகுதியைப் பார்க்கச் சொன்னார். அப்பகுதியில் தலைமுழுகினார் போன்ற பதிவுகள் இருந்தமையை அவரிடம் காட்டிய போது அவ்விடங்களின் பொருளைக் கவனிக்கும்படி அவர் சொன்ன்போதுதான் அவை மரபுத்தொடர்களாக வழங்கிவந்தமை தெரியவந்தது. சொற்சேர்க்கை அகராதியில் மரபுத்தொடர்களுக்கு இடம் இல்லை என சொன்ன அவர், மேலும் சில எடுத்துக்காட்டுகளைக் கூறினார். ‘சாப்பிட்ட பின் கை கழுவினார்’ என்பதில் ‘கை கழுவு’ என்பது சொற்சேர்க்கை, மாறாக ‘அவன் அவளைக் கைகழுவிவிட்டான்’ என்பதில் ‘கை கழுவு’ என்பது மரபுத்தொடர் எனக் காட்டியபோது அது மேலும் தெளிவாகியது.

      அதே மரபுத்தொடர்கள் பிறிதொரு பெயர்ச்சொல் ஏற்கும் வினையாக அமைந்தபோது அவை அகராதியுள் இடம்பெறும் தகுதியைப் பெற்றுக்கொண்டன. காட்டாக: ஒற்றுமைக்கு உலைவை (ப.127), கொள்கையைக் கைவிடு (ப.222), கோரிக்கைக்குச் செவிசாய் (ப.226), சட்டத்தைக் கையிலெடு (ப.231), சாந்தம் குடிகொள் (ப.248), தலைவலி மண்டையைப்பிளக்கிறது (ப.301), வயிற்றைப் பசி கிள்ளுகிறது, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது (ப.389) போன்றவற்றைக் கொள்ளலாம்.

வினப்படுத்தும் வினை

      ‘ஆகு’, ‘இடு’ ‘உறு’, ‘ஏற்று’ ‘படு’, ‘செய்’, ‘பண்ணு’, ‘போடு’  போன்ற வினைச்சொற்கள் ஒரு பெயர்ச்சொல்லுடன் இணைந்து அப்பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றும் தன்மையைக் கொண்ட வினைப்படுத்தும் வினைகளாகும். உதாரணமாக ‘இடு’, ‘போடு’ என்னும் வினைப்படுத்தும் வினைகள் ‘சோதனை’ என்ற பெயர்ச்சொல்லுடன் இணைந்து சோதனையிடு, சோதனைபோடு என அப்பெயரைக் கூட்டுவினைச்சொல்லாக மாற்றிவிடுகின்றன. இதனால் ‘இடு’ அல்லது ‘போடு’ என்னும் வினைச் சொற்கள் பெயர்ச் சொற்களுடன் இணையும் எல்லா இடங்களிலும் அவை வினைப்படுத்தும் வினையாகவே வருகின்றன எனக் கொள்ள முடியாது. உதாரணமாகப் பறவை முட்டை போட்டது / இட்டது, பிச்சை போடு / இடு என்னும் இடங்களில் அவை வினைப்படுத்தும் வினையாக அல்லாமல் வினைமுற்றுக்களாகவே செயல்படுகின்றன. இந்நிலையில் இடு, போடு போன்ற சொற்கள் எங்கு வினைமுற்றுக்களாகச் செயல்படுகின்றன, எங்கு அவை வினைப்படுத்தும் வினைகளாகச் செயல்படுகின்றன என்பதை வரையறுத்துக்கொள்ள வேண்டிய தேவை வந்தது.

      இவ்வேறுபாட்டைக் கண்டறிய பா.ரா.சு. அவர்கள் சில பரிசோதனைகளை கையாளக் கற்றுத்தந்தார். அதாவது இடு, போடு போன்ற வினை வடிவங்களைப் பெயரெச்சமாக்கி (இட்ட, போட்ட) அவற்றுடன் இணைந்து வரும் பெயர்ச் சொற்களுக்கு முன் வைத்து பார்க்கவேண்டும் என்பது முதல் சோதனை. அவ்வாறு இடு, போடு போன்ற வினைகளைப் பெயர்ச்சொற்களுக்கு முன் பெயரெச்சமாக்கி நிறுத்தும் போது பொருள் தரும் சூழல் இருந்தால் அவை குறிப்பிட்ட பெயர்ச்சொற்களோடு வினைமுற்றாக இணைகின்றன என்றும் அவ்வாறு சொல்லுக்கு முன்வைத்துப் பர்க்கும் போது பொருள்தராத / வழக்கில் இல்லாத சூழல் இருந்தால் அவை வினைப்படுத்தும் வினைகளாக அப்பெயர்ச்சொற்களுடன் இணைகின்றன என்று புரிந்துகொள்ளலாம். என்பதைச் சுட்டிக்காட்டினர்.

      உதாரணமாக ‘பிச்சை போடு’ என்பதில் வரும் போடு என்பதைப் பிச்சை என்னும் பெயர்ச்சொல்லுக்கு முன்பு பெயரெச்ச வடிவில் வைக்க முடியும். ‘அவர் போட்ட பிச்சையை ஏற்றுக்கொண்டான்’ என அது பொருள் உள்ள தொடராக அமைகிறது. பிச்சை போடு என்பதைப் போட்ட பிச்சை என மாற்றியதைப் போல சோதனைபோடு, சோதனையிடு என்பனவற்றைப் போட்ட சோதனை, இட்ட சோதனை என மாற்றி அமைத்துக்கொள்ள முடிவதில்லை. இது முதல் பரிசோதனை

      அடுத்ததாக ‘இடு’, ‘போடு’ போன்ற வினைகள் பெயர்ச்சொல்லுடன் இணைந்து வினைமுற்றாக வருகிற இடங்களில் அப்பெயெர்ச்சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையில் இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ என்பதை வருவித்துக்கொள்ள முடியும். (எ-டு) பறவை முட்டையைப் போட்டது. அனால் அதே ‘இடு’, ‘போடு’ போன்ற வினைகள் வினைப்படுத்தும் வினைகளாகச் செயல்படும்போது அவ்வினைகளுக்கும் பெயர்ச்சொற்களுக்கும் இடையே இரண்டாம் வேற்றுமையை விரித்துக்கொள்ள முடிவதில்லை. சோதனையைப் போட்டார் / சோதனையை இட்டார் என அவை நெருடலான தொடர்களாகவே அமைகின்றன.

      மூன்றாவதாகவும் ஒரு பரிசோதனையைச் செய்துபார்க்க முடியும். குறிப்பிட்ட அந்த இணைகளுக்கு இடையில் ‘கள்’ என்னும் பன்மை உருபை இணைத்துப்பார்ப்பதே அப்பரிசோதனை. பறவை சில முட்டைகளைப் போட்டது / இட்டது என, ‘கள்’ என்னும் பன்மை உருபு ஏற்றுக்கள்ளப்படும் இடங்களில் போடு, இடு என்பன வினைமுற்றுக்களாகச் செயல்படுகின்றன. சோதனைகளைப் போட்டார், சோதனைகளை இட்டார் என ‘கள்’ ஏற்றுக்கொள்ளப்படாத இடங்களில் போடு, இடு என்பன வினைப்படுத்தும் வினைகளாக அமைகின்றன.

      சில சொற்கள் எல்லாப் பரிசோதனைகளையும் கடந்துவிடும் சில சொற்கள் ஏதேனும் ஒர் பரிசோதனையைக் கடக்காமல் நின்றுவிடுதலும் உண்டு. மொழி என்பது மக்களின் புழக்கத்தில் இருந்துகொண்டிருப்பது. அது எல்லா இடங்களிலும் வரையறுக்கப்பட்ட விதிகளின் பிடிக்குள் அடங்கிவிடுவதில்லை. பல இடங்களில் நெகிழ்ச்சியுடந்தான் அது இருக்கும்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

      அகராதியின் தமிழ்ப்பகுதி ஓரளவிற்கு இறுதிசெய்யப்பட்ட பிறகு எடுத்துக்காட்டுகளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தரும் வேலை தொடங்கப்பட்டது. முதலில் பா.ரா.சு. அவர்களே அந்தப் பணியைத் தொடங்கினார். பின்னர் அப்பணிக்காக, சுபா என்பவர் அறிமுகமானார். சில காரணங்களால் அவரால் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடரமுடியவில்லை. மொழிபெயர்ப்புப் பணிக்காக அகராதியின் சில பக்கங்களை வாங்கிச் சென்ற அவர் சில நாட்களில் திரும்பி வந்து எடுத்துக்காட்டு வாக்கியங்களில் ஆண் வாசனை தூக்கலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அது உண்மைதான் என்பது அவர் சொன்ன கண்ணோட்டத்தில் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது. மீண்டும் அனைத்து எடுத்துக்காட்டு வாக்கியங்களையும் மறுபரிசீலனை செய்தோம். முடிந்தவரை பாலினச் சார்பற்ற எடுத்துக்காட்டு வாக்கியங்களைத் தர முயற்சித்தோம். சட்னி என்ற தலைச்சொல்லின்கீழ் அமையும் ‘தாளி’ என்ற வினைக்குரிய எடுத்துக்காட்டில் ‘தாளிக்காத சட்னிதான் அவனுக்குப் பிடிக்கும்’ என என்னைக் கருதி நான் எழுதியிருந்த வாக்கியத்தைத் ‘தாளிக்காத சட்னிதான் அம்மாவுக்குப் பிடிக்கும்’ என நானே மாற்றிக்கொண்டேன்.



தரவின்வழிப்பட்ட அகராதி

     இவ்வகராதியுள் பதிவாக்கப்பட்டிருக்கும் சொற்சேர்க்கைகள் அனைத்தும் முறையாகத் தரவுகளிலிருந்து எடுக்கப்பட்டவையே. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சில சொற்சேர்க்கைகள் வழக்கத்தில் இருப்பவை போலத் தோன்றும் ஆனால் அவை அகராதிப் பதிவில் இடம்பெற்றிருக்காது, மேலும் சில நாம் கேள்வியுறாதவையாகத் தோன்றும் எனினும் அவை பதிவாகத் தரப்பட்டிருக்கும். இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு எடுத்தக்காட்டைத் தருகிறேன். இவை எனது தனிப்பட்ட மொழொயுணர்வு சார்ந்து நான் சொல்பவை.

      ‘கலவரத்தில் ஈடுபடு’ என்பது நான் மிகவும் எதிர்பார்த்த சொற்சேர்க்கை. அனால் அது அகராதிப் பதிவில் இடம்பெறவில்லை. அடுத்து ‘பல் தீட்டு’ என்னும் சொற்சேர்க்கை அதுவரை நான் கேள்விப்படாத ஒன்று. எனினும் அது அகராதியில் இடம்பெற்றிருந்தது.

      கலவரம் என்னும் பெயர்ச்சொல்லின்கீழ் ‘ஈடுபடு’ என்னும் வினைச்சொல் தரப்படவேண்டும் என்றும், பல் என்னும் பெயர்ச்சொல்லின்கீழ் ‘தீட்டு’ என்னும் வினை நீக்கப்படவேண்டும் என்றும் நான் பா.ரா.சு அவர்களிடம் முரண்டு பிடித்திருக்கிறேன்.

      மொழி அறக்கட்டளையின் தரவுகளில் ‘கலவரம்’, ‘கல்வீச்சு’ என்னும் சொற்களோடு ‘ஈடுபடு’ என்னும் வினை சேர்ந்துவரவில்லை. எனவே ‘ஈடுபடு’ என்னும் வினை ‘கலவரம்’, ‘கல்வீச்சு’ என்னும் பதிவுகளின்கீழ் காட்டப்படவில்லை. தற்சமயம் இச்சொற்சேர்க்கை, ‘கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கலைக்கப் போலீசார் தடியடி நடத்தினர்’, ‘கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் கைது’ என்பன போன்று ஊடகங்களில் பரவலான புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. இந்த அகராதி இரண்டாம் பதிப்பைப் பெறும்போது இச்சொற்சேர்க்கை நிச்சயம் இடம்பிடித்துக்கொள்ளும் என நம்பலாம். 

      அதுபோலவே, பல் தீட்டு என்னும் சொற்சேர்க்கை தரவுகளில் இடம்பெற்றிருந்தமையால் அது அகராதிப் பதிவிலும் இடம்பிடித்துக்கொண்டது. இச்சொற்சேர்க்கை மிகவும் அரிதான ஒன்று என எங்களுக்குத் தெரிந்தபோதும் தரவில் வருகைகள் இருந்த காரணத்தினால் பல் - தேய், துலக்கு, விளக்கு, என மூன்று வினைகளுக்கு அடுத்ததாகத் தீட்டு என்பதைச் சேர்த்துக்கொண்டோம். தீட்டு என்பது தற்சமயம் வழக்கில் இல்லை எனினும் எங்கோ, எப்போதோ அது வழக்கில் இருந்திருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் அதுவும் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இறுதியாக

     தற்காலத் தமிழ் அகராதி, தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி உள்ளிட்ட தற்காலத் தமிழுக்குரிய பொது மற்றும் சிறப்பு அகராதிகளின் வருகை என்பது அவ்வகராதிகளைப் பயன்படுத்துவோருக்கான நேரடிப் பலன்களைத் தருவது ஒருபுறம் இருக்க. தமிழில் வருங்காலங்களில் உருவாக்கப்படும் புதிய அகராதிகளுக்கான -  தலைச்சொல் தேர்வு (மரபுத் தொடர்கள், சொற்சேர்க்கைகள் போன்றவற்றைத் தலைச்சொல்லாக எற்றுக்கொள்வதா? வேண்டாமா?), பதிவமைப்பு, இலக்கணக்குறிப்பு தருதல் உள்ளிட்ட இன்ன பிற விஷயங்களில் முறையான கொள்கை முடிவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் அவை உதவக்கூடும்.

      ஓராண்டு காலம் முழு நேரமாகவும் ஓராண்டு காலம் பகுதி நேரமாகவும் இவ்வகராதி உருவாக்கப் பணியில் ஈடுபட எனக்கு வாய்ப்புக்கிட்டியது. இப்பணியின் போது பெற்ற பல சுவாரசியமான அனுபவங்கள் நினைவின் அடுக்குகளில் சேகரமாகியுள்ளன. வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் அவை முன்வந்து அச்சொற்களோடு உறவாடிய தருணங்களை மனதில் நினைவலைகளாக எழுப்பிவிட்டுச் செல்கின்றன.

(நெய்தல் ஆய்வு மலர் - 2, இதழ் - 1 அகராதிச்சிறப்பிதழில் வெளிவந்தது. பக். 111 - 115)

Comments

Popular posts from this blog

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்