தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)
I
தமிழ் அகராதி வரலாற்றின் தொடக்கமாகத் தொல்காப்பிய உரியியல் விளங்குகிறது, உரியியல் தவிர்த்து இடையியல்,
மரபியல் உள்ளிட்ட இயல்களிலும் சொற்பொருள் விளக்கம் தருவனவாகச் சில நூற்பாக்கள்
இடம்பெற்றுள்ளன. வரலாற்று முறையில் அமைக்கப்படும் தமிழ் அகராதி ஒன்றிற்குத் தொல்காப்பிய
உரியியலும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சில பொருள் விளக்க நூற்பாக்களும் பங்களிப்பைத்
தர முடியும்,
இந்நேரடியான பங்களிப்பு ஒருபுறம் இருக்க, தொல்காப்பியரால் வேறு நோக்கத்திற்காக ஆக்கப்பட்ட நூற்பாக்கள் சிலவற்றிலிருந்தும்
பயன்பாட்டு அகராதியியலுடன் தொடர்புடைய அல்லது அகராதி ஒன்றை உருவாக்கும் பணிக்குத் துணைபுரியக்கூடிய
சில வழிமுறைகளை வகுத்துக்கொள்ள முடிகிறது. வேறு நோக்கத்தில் ஆக்கப்பட்ட நூற்பாக்களிலிருந்து
ஊகிப்பதன் அடிப்படையில் பயன்பாட்டு அகராதியியலுடன் தொடர்புடைய சில கருத்துகளை எடுத்துத்தர
முயல்கிறது,
இக்கட்டுரை. கட்டுரை இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல்
பகுதியில் உரியியல்பற்றிய சில பொதுவான செய்திகளும் இரண்டாம் பகுதியில் தொல்காப்பிய
நூற்பாக்களிலிருந்து பெறப்பட்ட அகராதியியலுடன் தொடர்புடைய செய்திகளும் தரப்பட்டுள்ளன.
தொல்காப்பிய
உரியியல் தரும் செய்திகள்
உரியியலில் இடம்பெற்ற 100 நூற்பாக்களில் முதல் இரண்டு நூற்பாக்களிலும், இறுதி எட்டு நூற்பாக்களிலும் உரிச்சொல்லின் இலக்கணத்தையும் அவை உணர்த்தும் பொருளை
விளக்க வேண்டிய முறைகள் குறித்த செய்திகளையும் விளக்கிவிட்டு எஞ்சிய 90 நூற்பாக்களில் தான் தேர்ந்தெடுத்த உரிச்சொற்களுக்குரிய பொருள்களைத்
தொகுத்துள்ளார்,
தொல்காப்பியர். உரியியல் வழியாக இரண்டு செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.
- உரியியலில் தொல்காப்பியரால் எத்தகைய சொற்கள் பொருள் விளக்கம் செய்யத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன?
- அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் எவ்வாறு பொருள் விளக்கம் பெற்றுள்ளன?
இவை குறித்து
முதலில் தெரிந்துகொள்வது அடிப்படையானது.
பொருள்
விளக்கம் பெறத் தேர்வான சொற்கள்
உரியியலானது, பொருள் உணர்ந்துகொள்வதற்குக் கடினமாக இருக்கும் சொற்கள் எனக் கருதப்பட்ட சொற்களுக்கு
மட்டுமே பொருள் விளக்கம் தருகிறது.
வெளிப்படு
சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட
வாரா வுரிச்சொன் மேன. (சொல்.
299)
என்ற உரியியல்
நூற்பா இதனை உறுதிசெய்கிறது. பொருள் உணர்ந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கும் சொற்கள்
என்ற கருத்தில் தொல்காப்பியரால் உரியியலில் தொகுக்கப்பட்ட சொற்களை இன்றைய நோக்கிலிருந்து
பின்வருமாறு பகுத்துக்காட்ட முடியும்.
- ‘துவன்று’,
‘முரஞ்சல்’ போன்ற சொற்கள்
(சொல்லும் பொருளும் தெரியாதவை)
- மாதர் ( = காதல்) போன்ற சொற்கள்
(மாதர் தெரிந்த சொல்;
காதல்- அரிய பொருள்)
- தட,
கய,
நளி ( = பெருமை) என்பன போன்ற சொற்கள்
(ஒரு பொருள் தரும் பல சொற்கள்)
- கடி (= வரைவு, கூர்மை,
காப்பு, புதுமை, விரைவு,
விளக்கம், மிகுதி. . . )
என்பன போன்ற
சொற்கள் (பல பொருள் தரும் ஒரு சொற்கள்)
இவை போன்று
நான்கு நிலைகளில் இருக்கும் 120 சொற்கள் உரியியலில் இடம்பெற்றுப் பொருள் விளக்கம் பெற்றுள்ளன.
உரியியலின்
பொருள் விளக்க முறைகள்
பொருளை
விளக்கும் முறைகளாக உரியியலின் வழி கூறக்கூடியவை சில உண்டு.
பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தித். . . (சொல். 298: 6)
வழக்கில்
இல்லாத சொற்களுக்குரிய பொருளை வழக்கிலுள்ள சொற்களைக் கொண்டு விளக்குதல்.
முன்னும் பின்னும் வருபவை நாடி. . . (சொல். 389: 2)
பொருள்
விளக்கம் செய்யப்பெற வேண்டிய சொற்களின் முன்னும் பின்னும் வரும் சொற்களையும் ஆராய்ந்து
பொருள் விளக்கம் செய்தல்.
ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல். . . (சொல். 389: 3)
பொருள்
விளக்கம் செய்யும்போது ஒத்த மொழியால் விளக்குதல்.
ஆகிய இவையே
உரிச்சொற்களின் பொருளை விளக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவையாகத் தொல்காப்பியர்
குறிப்பிடுகிறார்.
ஒத்த சொல்லைத்
தந்து பொருள் விளக்குதல்
ஒத்த மொழியான் புணர்த்தன ருணர்த்தல். . . என்பதற்கு
இணங்க உரிச்சொற்களை விளக்கும்போது ஒத்த சொற்களைத் தந்து விளக்குதல் என்பதே உரியியலில்
மிகுதியாகக் காணப்படுகிறது.
அரியே ஐம்மை (சொல்.
356)
வாளொளி யாகும் (சொல்.
367)
அமர்தல் மேவல் (சொல்.
380)
என்பன போன்றவை
இம்முறையில் அமைந்தவற்றிற்குரிய சில எடுத்துக்காட்டுகள். உரியியல் அல்லாத பிற இயல்களிலும்
இம்முறை காணப்படுகிறது.
அகவ லென்ப தாசிரி யம்மே. (பொருள்.
394)
என்ற நூற்பா
மேற்சொன்னதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
பொருள்
விளக்கும்போது ஒத்த மொழியால் விளக்க வேண்டும் என்று மட்டுமே தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும்,
தொல்காப்பிய உரியியல் நூற்பாக்களைக் கவனிக்கும்போது வேறு முறையிலும்
தொல்காப்பியர் பொருள் தந்திருப்பது தெரிகிறது. வேறு முறையில் பொருள் தந்ததாகப் பின்வரும்
இரண்டைக் காட்டலாம்.
அடை தந்து
விளக்குதல்
பொருள் விளக்கம் செய்கையில் ஒத்தசொல்லோடு அடை தந்து விளக்குதல்
என்ற நிலையும் உரியியலில் காணப்படுகிறது. அந்த அடை பொருளோடு தொடா¢புடையது. “சீர்த்தி மிகுபுகழ்”
(சொல். 312),
சீர்த்தி என்பது வெறும் “புகழ்” அன்று மிகு (பெரும்) புகழ். (குறிப்பு - சென்னைப் பல்கலைக்கழக அகராதியும் சீர்த்திக்கு
மிகுபுகழ் என்றே பொருள் தந்துள்ளது.)
வரையறை
தன்மையில் விளக்குதல்
நூற்பாக்கள்
சில அடை தராமல் இரு சொல்லால் ஒரு பொருளை உணர்த்தலும் உண்டு.
துயவென் கிளவி யறிவின் றிரிபே (சொல். 368)
வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம் (சொல். 371)
இவற்றை
ஒருவகையில் வரையறை தன்மையில் பொருள் விளக்கம் செய்துள்ளதாகவும் கொள்ள முடிகிறது.
II
தொல்காப்பிய
நூற்பாக்களிலிருந்து அகராதியியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் முறையில் வருவித்துக்கொள்ளப்பட்டுள்ள
சில தகவல்கள் இந்த இரண்டாவது பகுதியில் சில தலைப்புகளின் கீழ் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
1. அகராதிக்கு உரிய சொல் தேர்வு
அகராதிகளில் தனக்கென தனித்த பொருள் கொண்ட எல்லாச் சொற்களும் தலைச்சொற்களாக இடம்பெறத்
தகுதியுடையனவாக இருக்கின்றன. இருப்பினும், அகராதி
யாருக்காக,
எதன்பொருட்டு உருவாக்கப்படுகிறது என்பதைப் பொருத்தும் தலைச்சொல்
தேர்வு அமைகிறது. நெறிமுறைகளுடன் உருவாக்கப்படும் அகராதிகள் தமக்கெனத் தனித்த தலைச்சொல்
தேர்வுக்குரிய வழிமுறைகளை வகுத்துக்கொள்கின்றன. தலைச்சொல் தேர்வு குறித்த ஓரிரு கருத்துகளைத்
தொல்காப்பியர் நூற்பாக்கள் வழி காணலாம்.
அ) வழக்கில்
இருக்கும் ஒத்த சொற்களை ஏற்றல்
குரங்கி னேற்றினைக் கடுவ னென்றலும்
மரம்பயில் கூகையைக் கோட்டா னென்றலுஞ்
செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை யென்றலும்
வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலுங்
குதிரையு ளாணினைச் சேவ லென்றலும்
இருணிறப் பன்றியை யேன மென்றலும்
எருமையு ளாணினைக் கண்டி யென்றலும்
முடிய வந்த வழக்கி னுண்மையிற்
கடிய லாகா கடனறிந் தோர்க்கே. (பொருள். 624)
என்ற நூற்பா
சில உயிரினங்களின் வேறு பெயர்களாகத் தொல்காப்பியார் காலத்து வழங்கிவந்தவைகளைத் தொகுத்துள்ளது.
இவற்றுள் குரங்கு,
குதிரை,
எருமை என்ற மூன்று உயிரினங்களின் ஆண்பாற் பெயர்களும் அடக்கம்.
இப்பெயர்கள் தவிர்த்து எஞ்சிய கூகை, கிள்ளை, வெருகு,
பன்றி என்பனவற்றிற்குரிய வேறு பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இப்பெயர்கள் அனைத்தும் வழக்கில் உள்ளமையால் தொகுக்கப்பட்டுள்ளன என்கிறார், தொல்காப்பியார். இந்நூற்பா அகராதியியலுக்கு இரு தகவல்களைத் தருகிறது.
- இலக்கியச் சொற்களுக்கு ஏற்ற ஒத்த சொற்கள் வழக்கில் இருந்தால் அதனை நீக்கிவிடல்
கூடாது,
அதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வகையில் கோட்டான், தத்தை,
பூசை,
ஏனம் என்பன சொற்களஞ்சியத்தில் சேர வேண்டியவை எனத் தொல்காப்பியர்
தெளிவாக்குகிறார்.
- தொல்காப்பியர் காலத்தில் செய்யுள் வழக்கில் இருந்த சொற்களுக்கு இணையாக வழக்கில்
உள்ள சொற்களாக அவர் காட்டியிருப்பவை இக்காலத்தில் இல்லாமல் போயிருக்கலாம். ஆயினும்
அவை வரலாற்று முறை அகராதிக்கு உதவும்.
ஆ) விகார
வடிவங்களை ஏற்றல்
அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
விரிக்கும்வழி விரித்தலுந் தொகுக்கும்வழி தொகுத்தலும்
நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலும்
நாட்டல் வலிய வென்மனார் புலவர் (சொல். 403)
‘நாற் சொல்’ என குறிக்கப்பட்டவை இயற்சொல்,
திரிசொல்,
திசைச்சொல், வடசொல் என்பவை. அவை செய்யுளில்
வரும்போது அவற்றில் வலித்தல்,
மெலித்தல்,
விரித்தல்,
தொகுத்தல்,
நீட்டல்,
குறுக்கல் போன்ற திரிபுகளைப் புலவர் ஒருவர் செய்திருந்தால் அத்திரிபுகள்
ஏற்றக்கொள்ளக் கூடியனவே எனக் கூறுகிறது, இந்நூற்பா. எடுத்துக்காட்டாகத்
தாமரை என்னும் சொல் செய்யுளில் பயின்றுவரும்போது சில இடங்களில் குறைத்தல் விகாரத்தால்
மரை என வழங்கியிருக்கலாம். தாமரை என்பதில் முதல் குறைந்து வருகிற மரை என்பதும் சொல்லாக
ஏற்றக்கொள்ளக்கூடியதே என்பது இந்நூற்பாவின் வழி பெறப்படுகிறது. இதிலிருந்து மரை என்பன
போன்று விகாரவகையால் அமையும் சொற்களும் தலைச்சொல்லாகும் தகுதியை உடையதாகின்றன என்னும்
கருத்தைப் பெற முடிகிறது. (குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியும் மரை
என்னும் சொல்லைத் தாமரை என்னும் பொருளில் தலைச்சொல்லாகத் தந்துள்ளது.)
இக்காலத் தமிழில் ஆகாய விமானம் > விமானம் என முதல் விடுபட்டு
இரண்டாவது சொல்லே வழக்கில் மிகுதியாகவும் இருப்பதால் அது தலைச்சொல் தகுதியைப் பெறுகிறது.
மேலும்,
பல்கலைக்கழகம் > பல்கலை எனக் குறுக்கப்பட்டு
வழங்கிவருகிறது. இதுவும் தலைச்சொல்லாக ஏற்கப்படலாம். தொல்காப்பிய நூற்பா நமக்கு வழிகாட்டுகிறது.
இ) பெயரடை
வினையடை பற்றிய சிந்தனை
தலைச்சொல் தேர்வுக்குரிய பெயரடை, வினையடை குறித்த சிந்தனையைப்
பின்வரும் நூற்பா தெரிவிக்கும் கருத்தின் எதிர்மறையிலிருந்து பெறமுடிகிறது.
பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்
எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா (சொல். 237)
பெயரெச்சம்
மற்றும் வினையெச்சம் ஆகிய இரண்டும் எதிர்மறையில் அமைந்தாலும் பொருள் நிலையில் திரியாது
வரும். அதாவது ‘உண்ட சோறு’
என்பதிலும் ‘உண்ணாத சோறு’ என்பதிலும் ‘உண்டு வந்தான்’
என்பதிலும் ‘உண்ணாது வந்தான்’ என்பதிலும் உடன்பாட்டு, எதிர்மறை வடிவங்களில் பொருள் மாறுபடுவதில்லை என மேற்கண்ட நூற்பாவழி அறிகிறோம்.
இந்நூற்பாவின் கருத்திலிருந்து உடன்பாடு, எதிர்மறை
என்ற இரண்டு வடிவங்களிலும் ஒரே பொருளைக் கொண்டு அமையாத சில எச்ச வடிவங்களை வேறு வகையாகக்
கொள்ள வேண்டும் என்பதை வருவித்துக்கொள்ள முடியும். தற்காலத் தமிழில் வழங்கிவரும் ‘அடர்ந்த கூந்தல்’,
‘நீண்ட கூந்தல்’ என்னும் உடன்பாட்டுப் பெயரெச்ச
வடிவங்களுக்கு எதிர்மறை வடிவமான ‘அடராத’,
‘நீளாத’
அதாவது ‘அடராத கூந்தல்’
என்பதோ,
‘நீளாதா கூந்தல்’ என்பதோ வழக்கில் இல்லை. ‘அடர்ந்த கூந்தல்’
என்பதற்கு எதிர்மறையாக ‘அடர்த்தி
குறைவான கூந்தல்’
என்பதும் ‘நீண்ட கூந்தல்’
என்பதற்கு எதிர்மறையாகக் ‘குட்டையான
கூந்தல்’
என்பதுமே வழக்கில் உள்ளன. இந்நிலையில் இந்த இரு எச்சங்களையும்
இவை போன்று வரும் பிறவற்றையும் தனி வகையாக (பெயரடையாக) கருதி ‘அடர்ந்த’,
‘நீண்ட’
என்னும் வடிவில் தலைச்சொல்லாகப் பதிவாக்குவதற்குரிய ஒரு வழியை
மேற்காட்டிய நூற்பாக் கருத்தின் எதிர்கருத்திலிருந்து வருவித்துக்கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.
2. பொருள் வரையறை செய்யும் முறை
உரிச்சொற்களுக்குரிய பொருளை விளக்கும் முறைகளாக ஒத்த சொற்களால் விளக்குதல், அடை தந்து விளக்குதல்,
வரையறைத் தன்மையில் விளக்குதல் போன்ற நிலைகள் இருப்பதை உரியியலின்
வழியாகத் தெரிந்து கொண்டோம். உரியியல் தவிர்த்த பிற இயல்களிலும் சொற்பொருள் தருவனவாகச்
சில நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. அந்நூற்பாக்களிலிருந்தும் சில பொருள் விளக்கும் முறைகளை
இனம்காண முடியும்.
அ) நேர்மறைக்
கூறு எதிர்மறைக் கூறு இரண்டையும் வரையறையில் தருதல்
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும். (சொல். 201)
வினை என்பதன்
இலக்கணத்தைத் தரும் இந்நூற்பாவில் வினை என்பதன் வரையறை இரு கூறுகளைக் கொண்டுள்ளது.
நேர் கூறாகிய ‘காலமொடு தோன்றும்’
என்பதும் எதிர்மறைக் கூறாகிய ‘வேற்றுமை
கொள்ளாது’
என்பதும் இணைந்து பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளது. வினை என்ற
இலக்கணச் சொல்லின் வரையறைக்கு இரண்டுமே தேவை. எனவே, சொல்லின்
பொருளை வரையறுக்கும்போது தேவைப்படுமானால் நேரான கூறையும் எதிரான கூறையும் தருவதன் பொருத்தத்தைத்
தொல்காப்பிய நூற்பாவின் வழி அறிய முடிகிறது.
இதே முறையில்
இடைச்சொல் என்பதும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே. (சொல். 250)
இடைச்சொற்களாக
அமைவனவற்றின் இரு இயல்புகளான பெயரொடும் வினையொடும் நடைபெற்று இயலல் (நேர் கூறு), தமக்கெனத் தனி இயல்பு இல்லாமல் இருத்தல் (எதிர்மறைக் கூறு) என இரண்டையும் ஒன்றிணைத்து
வரையறை செய்திருப்பது இக்காலப் பயன்பாட்டு அகராதியியலுக்கு உதவக் கூடியது.
ஆ) உவமை
கூறி விளக்குதல்
சில கலைச்சொற்களை விளக்குவதற்குத் தொல்காப்பியார் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.
சூத்திரந் தானே
ஆடி நிழலி னறியத் தோன்றி
நாடுத லின்றிப் பொருணனி விளங்க
யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே. (பொருள். 481)
செய்யுளியலில்
இடம்பெற்றுள்ள மேற்கண்ட நூற்பாவில் சூத்திரம் என்பதை விளக்க வந்த ஆசிரியர் பொருள் விளக்கத்திற்கு
‘ஆடி நிழலி னறியத் தோன்றி’
என உவமையைப் பயன்படுத்தியுள்ளார். சூத்திரமானது படித்த அளவில்
ஆராய்தல் இல்லாமல் பொருள் தெரிந்துகொள்ளும்படி இருக்க வேண்டும் என்பதற்கு இணையாகக்
கண்ணாடியில் தெரியும் பிம்பம் (கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை எந்த ஆராய்ச்சியும்
தேவையில்லாமல் தெரிந்துகொள்வது போல்) உவமையாக பயன்படுத்தப்பட்டுப் பொருள் விளக்கம்
செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தொல்காப்பியர் உவமையியலில் கூறியுள்ள ‘உவமமும்
பொருளும் ஒத்தல் வேண்டும்’
(பொருள். 279)
என்ற நூற்பா கருத்தையும் இணைத்துக் காண வேண்டும்
இக்கால அகராதிகளில் பொருள் விளக்கத்திற்கு உவமையைப் பயன்படுத்துவதும் இல்லாமல்
இல்லை. வண்ணங்களைக் குறிக்கும் சொற்களை விளக்குவதற்கு உவமையே தேவைப்படுகிறது. வெள்ளை
என்பதைப் பாலில் உள்ளது போன்ற நிறம் என்னும் முறையில் விளக்குகிறோம். பொருளை விளக்குவதற்குத்
தொல்காப்பிய நூற்பா காட்டும் ‘உவமை வழி பொருள் விளக்கம்’
நமக்குப் பயன்படக்கூடியதே.
இ) இணைச்
சொற்களில் ஒன்றின் வரையறையில் முக்கிய கூறுபாட்டைக் கூறுதல்
எதுகை,
மோனை என்னும் இணையில் மோனை என்பதனை விளக்கும் நூற்பா
அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை. (பொருள். 405)
இங்கு மோனை
என்பதன் தலையாயதான ‘அடிதொறும் முதலெழுத்து ஒன்றிவருவது’ என்னும் பொருட்கூறுபாடு வரையறைக்குக்
காட்டப்பட்டுள்ளதற்குக் காரணம் எதுகை என்பதனோடு ஒப்பிடப்பட்டிருப்பதாலாகும். ஒப்பீடு
மோனையின் தலையாய கூறு எது என்பதைத் தீர்மானிக்கிறது. இக்கூறுபாடே மோனையின் தலையாய கூறு
என்பதை எதுகைக்குத் தொல்காப்பியர் தந்திருக்கும் விளக்கத்தின் வழியும் பெற முடிகிறது.
3. சொற்கள் உணர்த்தும் பொருளைப் புரிந்துகொள்ளல்
அ) பல பொருள்
ஒரு சொற்களின் பொருளைப் புரிந்துகொள்ளுதல்
செய்யுளிலும் சரி, வழக்கிலும் சரி பொருள் தடுமாற்றத்தை
ஏற்படுத்தும் சொற்கள் பெரும்பாலும் பல பொருள் ஒரு சொற்களாகவே இருக்கின்றன. பல பொருள்
ஒரு சொற்கள் அவை பயன்படுத்தப்படும் சூழலில்
என்ன பொருளில் ஆளப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் வழிமுறைகள் சிலவும் தொல்காப்பியரால்
சுட்டப்பட்டுள்ளன. இவ்வழிமுறைகள் ஒரு அகராதியியலாளார் தன் அகராதி உருவாக்கத்திற்குத்
தேர்வு செய்துகொண்ட தரவு மூலத்தில் இடம்பெற்றிருக்கும் பல பொருள் ஒரு சொற்களின் பொருளை
வரையறுப்பதற்கு உதவுவனவாக உள்ளன.
தொல்காப்பியர் பல பொருள் ஒரு சொற்களை 1. வினை வேறுபடும்
பலபொருள் ஒருசொல் என்றும் 2.
வினை வேறுபடா பலபொருள் ஒருசொல் என்றும் இரண்டாகப் பகுத்துள்ளார். முதலாவதான வினை
வேறுபடும் பலபொருள் ஒருசொல் அது ஏற்கும் வினையாலும் இனத்தாலும் சார்பாலும் பொருளைத்
தெரியப்படுத்துகிறது என்பது தொல்காப்பியர் கருத்து. (இரண்டாவதான வினை வேறுபடா பலபொருள்
ஒருசொல்லின் பொருளைச் சொல்பவன் குறிப்பின் மூலமாகவோ அல்லது மொழிச்சூழல் கடந்த புறச்சூழல்
மூலமாகவோ மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.)
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந்
தேறத் தோன்றும் பொருடெரி நிலையே. (சொல். 53)
உரையாசிரியர்
சேனாவரையரது எடுத்துக்காட்டுக்கள் இக்கருத்தை நமக்கு நன்கு புலப்படுத்துகின்றன. மா
என்பது மாமரத்தையும் குதிரையையும் வண்டையும் குறிக்கப் பயன்படுகிறது. மா என்னும் பலபொருள்
ஒருசொல் ‘பூத்தது’
என்னும் வினையை ஏற்றால் மாமரம் என்னும் பொருள் அந்த வினையால்
உணர்த்தப்படுகிறது. அதே மா என்னும் சொல் ‘ஓடியது’ என்னும் வினையை ஏற்பின் குதிரை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது பெறப்படும். இவ்வாறு
பலபொருள் ஒருசொல் அது ஏற்கும் வெவ்வேறு வினைகளைக் கொண்டு பொருள் தெளிவு (disambiguate) பெறுகிறது. இவ்வாறே மாவும் மருதும் ஓங்கின என்னும் தொடரில் மா என்னும் சொல் மாமரத்தைக்
குறிப்பதற்கு மருது என்னும் இனச்சொல் உதவுகிறது. இதைப் போன்றதே ‘கவசம் புக்கு நின்று மாக் கொணார்க’ என்றால் அங்கு மா என்பது குதிரையைச்
சார்பு முறையில் (by
association) குறிக்கிறது. இவற்றிலிருந்து ஒரு அகராதியியலாளார் தனது தரவு
மூலத்தில் இருக்கும் பலபொருள் ஒருசொற்கள் அவை உணர்த்தும் பொருள்களை, மேற்கண்ட முறையில்,
வினையின் வழியாகவும், இனத்தின்
வழியாகவும்,
சார்பின் வழியாகவும் வரையறுத்துக்கொள்ள வழி சொல்லியிருக்கிறார், தொல்காப்பியர்.
ஆ) ஒரு
பொருள் பல சொற்களைப் பகுத்துக் காணல்
ஒரு மொழியில் அதிக அளவில் ஒரு பொருள் பல சொற்கள் இடம்பெற்றிருந்தாலும்
அவற்றுள் நூற்றுக்கு நூறு விழுக்காடு சரியாகப் பொருந்தி வரக்கூடிய ஒரு பொருள் பல சொற்கள்
மிகமிக அரிதாகவே அமைந்திருக்கும் அல்லது இருக்காது என்றே சொல்லிவிடலாம். சில நுணுக்கமான
பொருள் வேறுபாடு அல்லது வழக்கு வேறுபாடு அவற்றுக்கிடையே இருக்கும். இது மொழியில் இயல்பான
ஒன்றுதான். ஒரு பொருள் பல சொற்களிடையே இழையோடும் நுண்மையான பொருள் வேறுபாட்டைப் புரிந்துகொள்ள
அவற்றின் பயன்பாட்டுப் பரப்பைப் பகுத்துக்காண்பது தேவையாகிறது. காட்டாக, ஆசை,
விருப்பம் என்ற சொற்களை எடுத்துக்கொண்டால். ‘ஆசை காட்டி மோசம்செய்துவிட்டார்’ என்பதில் ஆசை என்பதற்குப் பதிலாக
விருப்பம் என்பதை மாற்றாகத் தர முடியாது. அதுபோலவே ‘விருப்பப்
பாடம்’
என்பதிலும் ஆசை என்பதை மாற்றாகத் தர முடியாது. இவ்வாறு ஆசை என்பதன்
வருகை இடங்களையும் விருப்பம் என்பதன் வருகை
இடங்களையும் தொகுத்துக் காண்பதன் மூலம் அவற்றிற்கு இடையே உள்ள நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை
இனம்காண முடியும்.
ஒரு பொருள் பல சொற்களின் வருகையைப் பகுத்துக்காணும் முயற்சி
ஒன்றைத் தொல்காப்பியர் மேற்கொண்டுள்ளார்.
ஈதா கொடுவெனக்
கிளக்கு மூன்றும்
இரவின்
கிளவி யாகிட னுடைய. (சொல். 444)
அவற்றுள்
ஈயென் கிளவி
யிழிந்தோன் கூற்றே. (சொல்.
445)
தாவென்
கிளவி யொப்போன் கூற்றே. (சொல். 446)
கொடுவென்
கிளவி யுயர்ந்தோன் கூற்றே. (சொல்.
447)
என்னும்
நூற்பாக்கள் தரும் செய்தியானது ஈ,
தா,
கொடு என்னும் மூன்று சொற்களும் ஒரே பொருளைக் கொண்டன. எனினும், யார் யாரிடம் கொடுப்பது,
பெறுவது என்னும் அடிப்படையில் அவற்றின் வருகை அவர் காலத்து மொழியில்
இருந்திருப்பதைக் கவனித்துப் பதிவுசெய்துள்ளார், தொல்காப்பியர்.
ஒரு பொருள் பல சொற்களின் வருகை இடங்களைப் பகுத்துக் காண்பதற்கு ஒரு வழிகாட்டியாக இதனைக்
கொள்ளலாம்.
4. பொருள் விளக்க மொழியில் பயன்படுத்த வேண்டிய சொற்கள்
சொற்களின் பொருள் சொற்களைக் கொண்டே விளக்கப்படவேண்டியுள்ளது.
சொல் ஒன்றின் பொருளை விளக்கப் பயன்பட்ட சொல்லின் பொருள் என்ன என்ற வினாவைக் கேட்டுக்கொண்டே
போனால் அதற்கு முடிவே இல்லை என்னும் கருத்தில் தொல்காப்பிய உரியியலில் ஒரு நூற்பா இடம்பெற்றுள்ளது.
பொருட்குப் பொருடெரியி னதுவரம் பின்றே. (சொல். 391)
ஒரு சொல்லின்
பொருள் விளக்கத்தில் பயன்பட்ட மற்றொரு சொல்லின் பொருள் என்ன எனக் கேட்கத் தொடங்கினால்
அதற்கு வரம்பு இல்லை எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவதால் அத்தகைய கேள்வியைக் கேட்கவே
கூடாது என்பதல்ல,
அவர் கருத்து. மாறாக, அத்தகைய
கேள்வி எழாத வண்ணம் பொருள் விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட சொல் இருக்க வேண்டும் என்பதே
அவர் கருத்தாகக் கொள்ளவேண்டும். வேறு முறையில் சொன்னால், பொருள்
விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட சொல் வழக்கிழந்த சொல்லாகவோ கலைச்சொல்லாகவோ இருத்தல்
கூடாது. கருவி மொழியில் அதாவது பொருள் விளக்க மொழியில் பயன்படுத்தப்படும் சொல் அனைவருக்கும்
தெரிந்த பொதுச் சொல்லாக,
பொருள் என்ன என்ற கேள்வியை எழுப்பாத சொல்லாக இருக்க வேண்டுமென்பதே
இந்நூற்பாவிலிருந்து பெறப்படும் செய்தி.
5. சொல் வழக்குகளைச் சுட்டல்
அகராதிகளில் சொற்பொருள் விளக்கத்தோடு தேவைப்படும் இடங்களில்
அச்சொற்கள் எந்தத் துறையை (இசை,
மருத்துவம், சோதிடம் . . . ) சார்ந்தன என்றும், எந்த வட்டாரத்தில் (தஞ்சை,
திருநெல்வேலி, கொங்கு . . . ) வழங்குகின்றன
என்றும்,
எந்த மதத்தினரிடையே (கிறித்தவம், இஸ்லாம்
. . . ) புழக்கத்தில் இருக்கின்றன என்றும், எத்தகைய
மொழி வழக்கில் (பேச்சு வழக்கு,
உயர் வழக்கு, அருகிவரும் வழக்கு . . . )
உள்ளன என்றும் மொழி வழக்குக் குறிப்புகளைத் தருவது உண்டு. தொல்காப்பியர் குறிப்பிடும்
திசைச் சொற்கள் இன்று குறிக்கப்படும் வட்டார வழக்குச் சொற்களோடு இணைத்துப் பார்க்கப்படவேண்டியவை.
இவை போன்று வேறு சில நூற்பாக்களும் சொற்களின் வழக்கு நிலைகளைப் பற்றி பேசுவனவாக உள்ளன.
மங்கல மொழியு
மவையன் மொழியும்
மாறி லாண்மையிற்
சொல்லிய மொழியுங்
கூறிய மருங்கிற்
கொள்ளு மென்ப. (பொருள்.
246)
இந்நூற்பா
உரையில் இளம்பூரணர் மங்கல மொழி முதலியவற்றிற்குத் தக்க எடுத்துக்காட்டுகளைக் காட்டியுள்ளார்.
இவ்வெடுத்துக்காட்டுகளைக் கொண்டு பார்க்கையில் மங்கல மொழி என்பதும் மாறிலாண்மையிற்
சொல்லிய மொழி என்பதும் முறையே உயர் வழக்கு எனவும் உருவக வழக்கு எனவும் இன்றைய அகராதிகளில்
குறிக்கப்படுவனவற்றிற்கு இணையாக உள்ளன. அவையல் மொழி என்பதை அவையில் பேசக்கூடாத மொழி
என்பதாகக் கொண்டால் அதனையும் இன்றைய கொச்சை வழக்கு (non standard) என்பதனோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
6. பொருளைப் பிரித்தறியும் நுண்ணறிவு
கண்ணினுஞ்
செவியுனுந் திண்ணிதி னுணரும்
உணர்வுடை
மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப்
பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே. (பொருள்.
277)
இந்த மெய்ப்பாட்டியல் நூற்பாவின் கருத்திற்கு இணங்கக் கண்ணாலும்
செவியாலும் விளங்க உணரும் அறிவுடையவர்களுக்கு அல்லது பிறருக்கு விளங்காதது மெய்ப்பாடுகள்
மாத்திரம் அல்ல சொற்கள் உணர்த்தும் பொருளும்தான். அகராதி தொகுக்கும் பணியில் ஈடுபடுவோர்
சொற்களில் புதைந்து கிடக்கும் பொருள்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உணர்வு (sensitivity) உடையவர்களாக இருக்க வேண்டும்.
முடிவு
தொல்காப்பிய இலக்கணம் என்பது தொல்காப்பியர் காலத்து வழங்கிவந்த
மொழியின் விவரண இலக்கணமாகவோ அல்லது விதிமுறை இலக்கணமாகவோ பார்க்கப்படுவது போல அதனை
வேறு கோணங்களிலும் அணுகும்போது நுண்ணியகருத்து புலப்படுவது திண்ணம். அகராதியியல் கண்ணோட்டத்தில்
தொல்காப்பியத்தை வாசிக்கும்போது அகராதியியலுடன் தொடர்புடைய கூடுதலான செய்திகள் கிடைக்கக்கூடும்.
ஈடுபாடும் தருக்கமுறையும் அத்தகைய முயற்சிக்குத் தேவையானது.
துணைநூற் பட்டியல்
- கனகசபாபதி பிள்ளை, S. (பதிப்பாசிரியர்) 1934. தொல்காப்பியப் பொருளதிகார முதற்பாகம் (நச்சினார்க்கினியம்), சென்னை.
- கனகசபாபதி பிள்ளை, S. (பதிப்பாசிரியர்) 1935. தொல்காப்பியப் பொருளதிகார இரண்டாம்பாகம் (பேராசிரியம்), சென்னை.
- குருசாமி, ச. 2010.
‘உரியியல் நூற்பா அமைப்பு’, புதிய பனுவல்,
தொகுதி 02, இதழ்
04,
சென்னை.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்) 1981. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், அண்ணாமலை பல்கலைக்கழகம்,
சிதம்பரம்.
- நாச்சிமுத்து, கி. 2007.
தொல்காப்பியக் கட்டுரைகள் சொல், பேராசிரியர் கி நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கோவை.
- வேங்கடராமையா, கே.எம்., சுப்பிரமணியன்,
ச.வே., நாகராசன், ப.வே.,
(பதிப்பாசிரியர்கள்), 1996. தொல்காப்பிய மூலம் பாட வேறுபாடுகள்: ஆழ்நோக்காய்வு, பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம்.
7.
Vaiyapuri
Pillai, S. (Editor)
Tamil Lexicon (Reprint - 1982) University of Madras, Madras.
நன்றி
ReplyDelete