சொல்வலை வேட்டுவன் - பா.ரா.சுப்பிரமணியன்

பனுவல் இணைய நூல் அங்காடியில் சொல்வலை வேட்டுவன் நூல் வாங்கிட இங்கே சொடுக்குக

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வரும் சுவைமிகுந்த தொடரைத் தலைப்பாகக் கொண்ட இந்த நூலைத் தேர்ந்த தமிழ் அகராதியியல் அறிஞரும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (முதற்பதிப்பு), மரபுத்தொடர் அகராதி உள்ளிட்டவைகளின் முதன்மைப் பதிப்பாசிரியருமான பா. ரா. சுப்பிரமணியன் அவர்கள் உருவாக்கியுள்ளார். சொற்களுக்கும் அவருக்குமான நெருங்கிய உறவும், நெடுநாள் தொடர்பும் அவர் தன் நூலுக்கு இட்ட தலைப்பின் வழியே புலப்பட்டுவிட்டன. இந்நூல் நாட்டுப்புறவியல் குறித்த கட்டுரைகளையும், அகராதியியல் குறித்து கட்டுரைகளையும், பல்வகை என்னும் தலைப்பில் சில கட்டுரைகளையும் என மொத்தம் 34 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.

     
நாட்டுப்புறவியல் என்னும் முதல் பகுதியில் நாட்டுப்புற இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் முறையிலும் அவற்றின் தனித்தன்மைகளைக் காட்டும் வகையிலும் எழுதப்பட்டுள்ள 7 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை நூலாசிரியர் தமிழாய்வுலகில் நாட்டுப்புறவியல் என்னும் ஆய்வுத்துறை பெரிதும் அறிமுகமாகாத காலங்களில் எழுதியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன்காரணமாகவே இக்கட்டுரைகள் வாய்மொழி இலக்கியங்களில் நடைபெற வேண்டிய ஆய்வுகளைச் சுட்டிக்காட்டுவனவாய் அமைந்துள்ளன. தமிழ் நாட்டுப்புறவியலின் முன்னோடியான நூலாசிரியர் 1970 இல் பேராசிரியர் வானமாமலை வெளியிட்ட ஆராய்ச்சி இதழில் எழுதிய ‘இலக்கிய வலாற்றில் நாட்டு இலக்கியத்தின் பங்கு’ என்னும் கட்டுரை முதலில் இடம்பெற்றிருக்கிறது. ‘சங்ககால நாட்டார் மரபுகள்’ என்னும் கட்டுரை நாட்டார் மரபு எவ்வாறு செவ்வியல் மரபாக உருமாற்றம் பெறுகிறது அல்லது பெறக்கூடும் என்பதை விவரிக்கிறது. 1970களில் நாட்டுப்புற இலக்கிய அராய்ச்சிக்கு பெருமதிப்பு ஈட்டித்தந்த, அமெரிக்கப் பேராசிரியர் ஆலன் டண்டிஸ் 1990இல் தமிழகத்திற்கு வந்திருந்தபோது அவருடன் நடத்திய பேட்டியும் ஒரு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. அந்த நேர்காணலின் முடிவில்

நாட்டார் வழக்காற்றியலின் உலக அரங்கு எப்படி இருக்கிறது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இது சிறிய மாற்றத்தை உண்டாக்கும் ஆனால் ஒரு புதிய உலகின் தொடுவானத்தைக் காட்டக்கூடும்.

என்று ஆலன் டண்டிஸ் கூறுவது இன்றைய நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களுக்குப் புத்துணர்வு ஊட்டும் வகையில் உள்ளது. 

      இரண்டாவது பகுதியில் அகராதிகள் உருவாக்குவது குறித்தும் அந்த துறையின் நுட்பங்கள் குறித்தும் எழுதப்பட்ட 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கும் மேலாக நூலாசிரியர் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அகராதித் துறையில் அவருக்குக் கிடத்த அனுபவங்களின் அடிப்படையில் எழுந்துள்ளன. ஆய்வுச்செறிவுடன் எழுதப்பட்ட ‘ஒரு சொல் பல்பொருள்: பொருள் விரிவையும் வளர்ச்சியையும் அகராதியில் காட்டும் முறை’, ‘தற்கால மரபுத்தொடர் அகராதி: அறிமுகம்’ உள்ளிட்ட  கட்டுரைகளோடு அனைவருக்கும் பயன்படக்கூடிய முறையில் எளிமையாக எழுதப்பட்ட ‘தெரிந்த சொல்லுக்கு அகராதி தேவையா?’, ‘எது சரி? எது தவறு? அகராதி என்ன சொல்கிறது?’ போன்ற  கட்டுரைகளும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

      இவை தவிர மறுபதிப்பு செய்யப்பட்ட தமிழ் அகராதிகளுக்கு நூலாசிரியர் எழுதிய முன்னுரைகளும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் எதுகை அகராதி அப்பாய் செட்டியார் நிகழ்த்திய அற்புதம் என்னும் முன்னுரை குறிப்பிடத் தகுந்தது. இந்த அகராதி 1938இல் தருமபுரியிலிருந்து வெளியாயிற்று. “எதுகை அகராதி” இக்காலத்தில் Reverse Dictionary என்று அறியப்படுகிறது, அப்பாய் செட்டியார் 70 ஆண்டுகளுக்குமுன் சொற்களை அவற்றின் இறுதி எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு அகரவரிசைப்படுத்தித் தந்திருப்பதை இந்த முன்னுரை விளக்குகிறது.

      இன்றுவரை ஆசிரியர் ஈடுபட்டிருக்கும் துறை என்பதால் அகராதிகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளே தொகுப்பில் மிகுதியாக உள்ளன. ‘கைகோக்கும் சொற்களுக்கு ஓர் அகராதி’ என்னும் கட்டுரை உருவாகிவரும் ஓர் அகராதியைப் பற்றியது; தமிழ் ஆய்வுலகு அவாவிநிற்கும் ஒரு சிறந்த பணியைப் பற்றியது. குறிப்பிடத்தகுந்த மற்றொரு கட்டுரை ‘வள்ளுவர் அறிமுகப்படுத்தியச் சொற்கள்’ இந்த கட்டுரையில் சங்க இலக்கியத்தில் காணப்படாத, வள்ளுவரின் குறட்பாக்களில் காணப்படும் சொற்கள் தொகுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன. இருட்டு, குடும்பம், நாகரிகம், பிற்பகல், சிற்றின்பம் போன்ற சொற்கள் வள்ளுவரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் வழங்கிவருவனவற்றுள் சில என்னும் செய்தி சுவையானது.

      பல்வகை என்பதாக அமைந்த மூன்றாம் பகுதியில் தமிழ் மொழிக்கும் திராவிட மொழிகளின் ஆய்விற்கும் பெரும் பங்களிப்பைச் செய்த பேராசிரியர் வ. ஐ.  சுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செய்யும் முகமாக எழுதிய கட்டுரையும், தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வரிசை முறையில் தந்த அறிஞர் மு. அருணாசலத்தின் ஆங்கில நூல்கள் குறித்த கட்டுரையும், தமிழ் இலக்கியங்களைச் சுவைபட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஏ. கே. இராமானுஜன் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

     
      நூலாசிரியர் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியத்தின் மாணவர் என்பதால் ஆசிரியரின் மறைவு குறித்து எழுதும்போது “குறைகளே இல்லாத மனிதர் என்று அவரைச் சித்தரிப்பதைவிட அவருடைய நிறைந்த குணங்களால் தழைத்தவர்கள் பலர்  குறிப்பாக அவருடைய ஆய்வு மாணவர்கள்  என்று கூறுவதையே நான் விரும்புகிறேன்” என்று எழுதியிருப்பது நல்லாசிரியர் ஒருவரிடம் கட்டுண்ட மாணவரின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றது.

      மு. அருணாசலம் ஆங்கிலத்தில் எழுதிய சில நூல்களை அறிமுகம் செய்யும் முறையில் எழுதப்பட்ட கட்டுரையில் மு. அருணாசலம் அட்சய திருதியைபற்றி குறிப்பிட்டுள்ள செய்தி ஒன்று உள்ளது. “கோயில்களில் ஆராதனை, பக்தர்களுக்குப் பிரசாதம் தருவது தவிர வேறு முக்கியத்துவம் இதற்கு (அட்சய திருதியைக்கு) இல்லை. ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுதான் இந்த நாளுக்கு உரியது” என்ற குறிப்புடன் இன்றைய அட்சய திருதியை கொண்டாட்டங்களை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

      நூலின் மூன்று பகுதிகளும் வெவேறு களங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளமை மூன்றுவிதமான நூல்களை வாசித்த அநுபவத்தைத் தருவதோடு, நூல் ஒன்றைத் தொடர்ந்து வாசிக்கும்போது வாசகனுக்கு ஏற்படும் சலிப்பைத் தவிர்க்கவும் பயன்பட்டுள்ளது. நாட்டுப்புற இலக்கியங்கள் குறித்தும் அகராதிகள் குறித்தும் பல அரிய தகவல்களை எளிய நடையில் தரும் இந்நூலின் வெளிப்பாட்டு முறை வாசகரைக் கவரும் மற்றொரு சிறப்பம்சமாகும்.


நூல்:        சொல்வலை வேட்டுவன் (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர்:    பா. ரா. சுப்பிரமணியன்
வெளியீடு:   கயல் கவின் புக்ஸ்
16/ 25, இரண்டாம் கடல் போக்குச் சாலை
திருவான்மியுர்
சென்னை 600 041.
2009.
(குமுதம் தீராநதி பிப்ரவரி 2011 இதழில் வெளிவந்தது. பக் 40,41)


Comments

Popular posts from this blog

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்