இலக்கன நூற்பா வாசிப்பு : அருத்தாபத்தியும் மாட்டேறும்


முன்னுரை
            பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழில் பெரும்பாலான நூல்கள் செய்யுள் வடிவிலேயே செய்யப்பட்டன. மேலும், நூல்கள் நுண்மையாகவும் செறிவான கருத்துகளுடனும் அமைவது புலமையுலகில் போற்றப்பட்டுள்ளது. நுண்மையாகவும் செறிவாகவும் யாப்புவிதிகளுக்கு உட்பட்டும் அமையும் செய்யுள்களை அல்லது நூற்பாக்களைப் படைப்பதற்கு நல்ல புலமை தேவைப்பட்டது. அது போலவே அச்செய்யுள்களையும் அந்நூற்பாக்களையும் விளங்கிக் கொள்வதற்கும் நல்ல புலமை தேவைப்பட்டது. அத்தகைய செய்யுள்களை அல்லது நூற்பாக்களைப் புலமை நலம் பெற்றவர்கள் பலமுறை படித்ததன் பயனாக அவற்றை அணுக வேண்டிய முறைகளை அல்லது அவற்றிற்குரிய வாசிப்பு முறைகளைக் கண்டறிந்தனர். இவ்வாறு காலம் காலமாகத் தமிழ்ப் புலமையுலகு தொகுத்துள்ள முறைகளே பொருள்கோள்கள் எனவும் தந்திர உத்திகள் எனவும் பரிணமித்துள்ளன.
            இலக்கியச் செய்யுள்களின் பொருளை வெளிப்படுத்த உதவும் அல்லது வாசிக்க உதவும் முறைகள் பொருள்கோள்களாகவும் இலக்கண நூற்பாக்களின் நுண்பொருளை வெளிப்படுத்த உதவும் முறைகள் தந்திர உத்திகளாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ‘மொழி மாற்று’ முதலிய பொருள்கோள்கள் இலக்கண நூற்பாக்களின் பொருளை விளக்குவதற்கும் இலக்கண உரையாசிரியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொது நிலையில் இலக்கிய உரையாசிரியர்களுக்கு பொருள்கோள்கள் துணையெனில் இலக்கண உரையாசிரியர்களுக்கு நூற்பா உணர்த்தும் நுட்பமான பொருளை வெளிப்படுத்துவதற்குத் தந்திர உத்திகளே பெரிதும் பயன்பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடங்கி தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல்களில் இவ்வுத்திகள் முப்பத்தி இரண்டு என வகைபடுத்தப்பட்டுள்ளன. இவை போக இலக்கன உரையாசிரியர்களும் சில உத்திகளைப் பயன்படுத்தி தங்கள் உரைகளில் பொருள் விளக்கம் செய்துள்ளனர். அவ்வாறு உரையாசிரியர்களால் தொகுகப்பட்ட உத்திகளுள் ஒன்றான அருத்தாபத்தி பற்றி விவாதிக்கிறது இக்கட்டுரை.
தொல்காப்பிய உத்திகள்
            தொல்காப்பிய மரபியல் பகுதியில் முப்பத்திரண்டு வகையான உத்திகளைத் தொகுத்துள்ள தொல்காப்பியர், உத்தி என்பதற்கான விளக்கத்தைத் தரவில்லை. உரையாசிரியர்களான இளம்பூரணரும் பேராசிரியருமே உத்திபற்றியதான விளக்கங்களைக் கட்டமைத்துள்ளனர். உத்தியை இளம்பூரணர் தந்திர உத்தி என்றே குறிப்பிடுகிறார். ‘தந்திரமெனினும் நூலெனினும் ஒக்கும். உத்தியென்பது வடமொழிச் சிதைவு அது சூத்திரத்தின்பாற் கிடப்பதொரு பொருள் வேறுபாடு காட்டுவது’ (பொருள். 656, இளம்.) என்று இளம்பூரணரும் ‘உத்தி என்பது நூல் செய்யுங்கால் இயல்புவகையாகிய வழக்குஞ் செய்யுளும் போலச் செவ்வனஞ் சொல்லுதல்’ (பொருள். 665, பேரா.), அதாவது நூற் செய்திகளைச் செம்மையாகச் சொல்வது உத்தி என்று பேராசிரியரும் விளக்கம் தருகின்றனர். இளம்பூரணருக்குப்பின் வந்த நன்னூலார் இளம்பூரணரின் உரைப்பகுதியை உள்வாங்கிக்கொண்டு உத்திக்குரிய இலக்கணத்தை,
                        நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
                        ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத்
                        தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி.         (நன். 15,)
என்ற நூற்பாவாகச் செய்துள்ளார். உரையாசிரியர்களால் தந்திர உத்தி என்றும் நூற்புணர்ப்பு என்றும் இது குறிக்கப்பட்டுள்ளது.
மூன்று பகுப்புகள்
            தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் தொகுத்துள்ள உத்தி வகைகளை மூன்றாகப் பகுத்துப் பார்க்கமுடியும்.

நூற்பாவில் சுட்டப்பட்ட விதியை அல்லது பொருண்மையை ஒரு வரையறை                    வாய்பாட்டிற்குள் பொருத்திப்பார்ப்பதாக அமையும் ஆணை கூறல், தொகுத்துக்                 கூறல், இறந்தது காத்தல், எய்தியது விலக்கல், எதிரது போற்றல் உள்ளிட்ட உத்தி   வகைகள்.

நூற்பாவில் நேரடியாகக் குறிக்கப்பெறாமல், ஆனால், நூற்பா விளக்கும் செய்திகளுடன்  தொடர்புடைய பிறவற்றையும் உரையில் வருவித்துக்கொள்ளப்ப யன்படும் வந்தது    கொண்டு வாராதது முடித்தல், ஒன்றினம் முடித்தல் தன்னினம்  முடித்தல், உரையிற்             கோடல் முதலிய உத்தி வகைகள்.


நூற்பா உணர்த்தும் பொருளைச் செழுமைப்படுத்தித் தெளிவாக்கப்    பயன்படுத்தப்பட்ட அதிகார முறைமை, மாட்டேறு, அருத்தாபத்தி போன்ற உத்தி  வகைகள்.

            நூற்பாவின் விதியை அல்லது பொருண்மையை ஒரு வரையறை வாய்பாட்டிற்குள் பொருத்திப்பார்ப்பதாக அமையும் (வகை: 1) உத்திகள் பெரும்பாலும் கருத்துரைப் பகுதியிலேயே  சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. காட்டாகச் சொல்லதிகாரத்தில் அமைந்த,
                        முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி
                        ஆவொடு வருதற் குரியவும் உளவே.                     (சொல். 123, இளம்.)
என்ற நூற்பாவிற்கான கருத்துரை இளம்பூரணரால் ‘இச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின் இஃது இறந்தது காத்தல் நுதலிற்று’ (சொல். 123, இளம்.) என்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. நூற்பா இறந்தது காத்தல் என்னும் உத்தியின்படி அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உரையாசிரியரால் கருத்துரைப் பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்ற இரண்டு வகை உத்திகளும் அவற்றின் பயன்பாடு காரணமாக உரையாசிரியர்களால் அகலவுரைப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
                        சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற
                        இன்றி யமையாது இயைபவை எல்லாம்
                        ஒன்ற உரைப்பது உரையெனப் படுமே.                (பொருள். 658, பேரா.)  
என்ற பொருளதிகார நூற்பா, உரையின் இலக்கணத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்நூற்பாவில் இடம்பெற்றுள்ள ‘இன்றியமையாது இயைபவை எல்லாம் ஒன்ற உரைப்பது உரையெனப் படுமே’ என்ற அடிகளுக்கு உரை எழுதிய பேராசிரியர், ‘இனிச் சூத்திரத்துட் பொருளன்றியும் ஒருதலையாக அதற்கு இன்றியமையாது பொருந்துவனவெல்லாம் அதனொடு கூட்டிச் சொல்லுதல் உரை எனப்படும் எ-று’ (பொருள். 658, பேரா.) என்பதாக எழுதியுள்ளார். இதன்படி நூற்பாவில் நேரடியாகக் கூறப்படாத அதே வேளையில் நூற்பாவோடு தொடர்புடைய செய்திகளையும் நூற்பா உணர்த்தும் நுட்பமான பொருள்களையும் வெளிப்படுத்த உரையாசிரியர்களுக்கு (வகை: 2, 3) உத்திகளே இடமளித்துள்ளன. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தங்கள் உரையில் பயன்படுத்திய இவ்வகை (வகை: 2, 3) உத்திகளை, தொல்காப்பியர் தொகுப்பினுள் அடங்கியவை, தொல்காப்பியர் தொகுப்பினைக்  கடந்து அமைந்தவை என்ற நிலையிலும் பகுத்துப்பார்க்க முடியும்.
            நூற்பாக்களின் நுட்பமான பொருளை வெளிப்படுத்தவும் நூற்பா உணர்த்தும் பொருளை ஐயத்திற்கு இடமின்றிப் புரிந்துகொள்ளவும் தொல்காப்பிய உரையாசிரியர்களால் பயன்படுத்தப்பட்ட (வகை: 3) உத்திகள், நூற்பா என்னும் ஒரு முழுமை அலகின் பொருள் விவரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
I) அருத்தாபத்தி
            தொல்காப்பியர் தொகுத்துள்ள உத்திகளின் பட்டியலில் இடம்பெறாத ஆனால் உரையாசிரியர்களால் பயன்படுத்தப்பட்ட உத்திகளுள் அருத்தாபத்தி என்பதும் ஒன்று. பேராசிரியர், மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல் என்ற உத்தியை விளக்குகையில் ‘மற்று இதனை அருத்தாபத்தி யென்னாமோ வெனின் என்னாமன்றே’ (பொருள். 665, பேரா. ப. 361) என்றவாறு எழுதியதிலிருந்து மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல் என்ற உத்தியையும் அருத்தாபத்தி என்பதையும் ஒன்றாகக் கொண்டுள்ளமை தெரிகிறது.
                        எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே.  (சொல். 61, இளம்.)
என்ற நூற்பா உரையில் ‘மற்றென்னை கருதியது எனின் இஃது அருத்தாபத்தி பெற்றது என்ப, விதந்த மொழியினும் வேறுஞ் செப்பும் என்பது பரிமாண சூத்திரம் இதுவும் அப்பொருட்டு.’ (சொல். 61, இளம். ப. 98) என்றவாறு இளம்பூரணர் எழுதிய உரையிலிருந்து இந்நூற்பா அருத்தாபத்தியைக் குறிப்பதாக இளம்பூரணர் கருதியுள்ளார் என்பது புலனாகிறது. இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்துள்ள விளக்கத்தையும் எடுத்துக்காட்டுகளையும் மறுக்கும் சேனாவரையர் வேறு விளக்கத்தைத் தருகிறார். அறம் செய்தான் துறக்கம் செல்வான் என ஒன்றனை எடுத்துச் சொல்ல அதற்கு இனமான மறம் செய்வான் நரகம் செல்வான் என்ற கருத்தும் பெறப்படும். இதுபோன்று இனப்பொருளைக் குறிப்பது அதனைச் சொல்லுபவர்களின் கருத்திற்கு ஏற்பவே அமையும். அவ்வாறு சொல்லுபவர்களுக்கு அக்கருத்து இல்லையெனில் அது இனப்பொருள் உணர்த்தாது என விளக்கம் தருகிறார். மேற்கண்ட நூற்பாக்களுக்கு உரையாசிரியர்கள் தந்துள்ள விளக்கங்களின்வழி அருத்தாபத்தி என்பது ஒரு பொருள் முடிவிலிருந்து அதற்கு இனமான இன்னொரு பொருள் முடிவையும் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும் எனக் கொள்ளலாம். உரையாசிரியர்கள் அருத்தாபத்தி என்னும் உத்தியைப் பயன்படுத்தி விளக்கங்கள் எழுதியுள்ள இடங்களைத் தொகுத்துக் காண்பதன் மூலம் அருத்தாபத்தியை மேலும் விளங்கிக்கொள்ள முடியும்.
                        தொடரல் இறுதித் தம்முன் தாம்வரின்
                        லகரம் றகரவொற் றாதலு முரித்தே.          (எழுத்து. 215, இளம்.)
என்ற எழுத்ததிகார நூற்பா பல, சில என்னும் தொடர்மொழி அல்லாத சொற்கள் தம் முன்னர் தாமே வந்து புணரும்போது நிலைமொழி ஈற்றில் உள்ள லகரம் றகரவொற்றாகத் திரியும் எனக் கூறுகின்றது. இந்நூற்பா உரையில் இளம்பூரணர் அருத்தாபத்தி உத்தியைப் பயன்படுத்தி நல்லதொரு மேல்விளக்கத்தைத் தந்துள்ளார். ‘அருத்தாபத்தி முகத்தால் தம்முன் தாம் வரின் லகரம் றகரவொற்றா மெனவே தம்முன் பிற வந்தவிடத்து லகரம் றகரவொற் றாகாது அகரம் கெடுமென்பது கொள்ளப்படும். எ-டு. பல்படை, பல்யானை, சில்படை, சில்வேள்வி என வரும்’ (எழுத்து. 215, இளம்.). இளம்பூரணரது மேற்கண்ட விளக்கம் நூற்பாவில் நேரடியாக இல்லை, அருத்தாபத்தி உத்திமூலமே கொண்டுவந்து இணைக்கப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியரும் இந்நூற்பாவிற்கான உரையில் அருத்தாபத்தியைப் பயன்படுத்தி மேற்கண்டவாறே உரைசெய்துள்ளார் (எழுத்து. 214, நச்சர்.).
                        ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
                        பன்மைக் காகும் இடனுமார் உண்டே.      (சொல். 461, நச்சர்.)
இந்நூற்பாவிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ஒருமையைச் சுட்டி நிற்கும் சொல் பன்மைக்குப் பொருந்தி நிற்கும் இடமும் உண்டு எனக் கூறி ‘அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்’ என்ற எடுத்துக்காட்டைக் காட்டி விளக்கியுள்ளார். இங்குத் தந்தை என்ற ஒருமையைக் குறித்துவரும் சொல் சோழர் என்ற பன்மை உணர்த்தும் சொல்லோடு பொருந்திவந்துள்ளமை விளக்கப்பட்டுள்ளது. இவ்விளக்கங்களோடு ‘பன்மை சுட்டிய பெயர்ச்சொல் ஒருமைக்குப் பொருந்தி நிற்கும் இடமும் உண்டு என்னும் பொருள் அருத்தாபத்தியான் தந்தது’ (சொல். 461, நச்சர். ப. 340) என்ற விளக்கத்தையும் இணைத்துள்ளார். ஒருமைச் சொல் பன்மைக்கு ஆவது போலப் பன்மைச்சொல் ஒருமைக்கும் அமையும் என்னும் இவ்விளக்கத்தைத் தர நச்சினார்க்கினியருக்கு அருத்தாபத்தி உத்தியே துணைநின்றுள்ளது.
            அருத்தாபத்தி உத்தி பொருந்தாத இடம் ஒன்று உரையாசிரியர் கல்லாடரால் குறிக்கப்பட்டுள்ளமையும் இங்குக் கவனிக்கத் தக்கதாய் உள்ளது.
                        ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
                        மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
                        நேரத் தோன்றும் பலரறி சொல்லே.           (சொல். 7, கல்லா.)
பலர்பால் ஈறுகள் இவை என உணர்த்தும் இந்நூற்பா உரையில் கல்லாடர், ‘நேரத்தோன்றும் பலரறிசொல் மாரைக் கிளவி யுளப்பட மூன்றுமென எழுவாயும் பயனிலையுமாக்கிக் கொள்ளின் நேரத்தோன்றும் பலரறிசொல் இவையென நேரத் தோன்றாதனவும் பலரறி சொல்லுளவென்ற கருத்து அருத்தாபத்திப்பட்டு அவையுந் தமக்குடன்பாடாய் மேற்கூறுவன போல நிற்பதொரு சொன்னோக்கப்படுதலானும் தோன்றும் என நின்ற செய்யும் என்ற சொல் முற்றோசைப்பட்டு, பயனிலை வகையாதற் கியையாது நிற்றலானும் அவ்வாறு கூறலாகாதெனவுணர்க’ (சொல். 7, கல்லா. ப. 66). என்ற உரைப்பகுதி மிக அழகானதொரு விளக்கத்தைக் கொடுக்கிறது. நூற்பாவின் இறுதி அடி நேரத் தோன்றும் பலரறி சொல்லே என்றவாறு அமைந்துள்ளது. இந்த அடியின் தன்மையால், அருத்தாபத்தி உத்தியைக்கொண்டு நேரத் தோன்றாத பலரறி சொல்லும் உண்டு என்று எண்ணும்படியான மயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த மயக்கத்தைத் தவிர்க்கவே மேற்கண்ட விளக்கத்தை எழுதியுள்ளார் கல்லாடர். அருத்தாபத்தி போன்ற உத்திகள் பயன்படுத்தப்படக் கூடாத இடங்களும் உரையாசிரியர்களால் கவனிக்கப்பட்டுள்ளன என்பது இதன்வழிப் புலனாகிறது.
II) மாட்டேறு
            தமிழ் இலக்கணப் பரப்பில் மேலும் நுணுகி ஆராய வேண்டிய பகுதிகளுள் உத்தி என்பதும் அடங்கும். இது தந்திரவுத்தி என்றும் நூற்புணர்ப்பு என்றும் உரையாசிரியர்களால் குறிக்கப்பட்டுள்ளது. நூலைச் செறிவுடன் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட இவ்வுத்தியைத் தொல்காப்பிய மரபியல் முப்பத்தியிரண்டாக வகைபடுத்தியுள்ளது. உத்திகளைப் பட்டியலிட்டுள்ள தொல்காப்பிய மரபியல் நூற்பாவின் இறுதி அடிகள்,
            மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு
            இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும். (தொல்.பொருள்.656.இளம்.)
என்றவாறு அமைந்துள்ளன. இவ் அடிகளின் துணைகொண்டு இளம்பூரணர் தம் உரையில் தொல்காப்பியர் குறித்துள்ள முப்பத்தியிரண்டு உத்திகளோடு மாட்டேறு முதலான மேலும் நான்கினை உத்தி வகைகளாக இணைத்துக் கொண்டுள்ளார்.
            மேற்கண்ட தொல்காப்பிய அடிகளுக்கு உரை எழுதிய பேராசிரியர் அங்ஙனம் இனம்பற்றி அவற்றோடு அடங்குவனவெல்லாம் அவற்று விரியாகுமென்னுங் கருததினாற் கூறினானென்பது என்றவாறு எழுதியுள்ளார். தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள உத்திகள் போக மேலும் சிலவும் உத்தி இனங்களாக அமையும் என்பதே பேராசிரியர் கருத்தாகிறது. உத்திவகைகளைக் கூறும் மேற்கண்ட தொல்காப்பிய நூற்பாவில் கொண்ட பாடங்களில் இரண்டு உரையாசிரியர்களிடையேயும் வேறுபாடு காணப்படுகிறது. இளம்பூரணர், பேராசிரியர் இருவர் காலத்திற்கும் இடையே தோற்றம்பெற்ற நன்னூலில் உத்திவகை முப்பத்தியிரண்டு என்றே குறிக்கப்பட்டுள்ளது எனினும் நன்னூலுள் தொல்காப்பியர் குறிப்பிடாத பதினேழு புதிய உத்தி வகைகளைக் காணமுடிகிறது. இவை அனைத்தும் தமிழில் வழக்கில் இருந்துவந்த உத்தி வகைகளின் எண்ணிக்கை முப்பத்தியிரண்டைவிட அதிகம் என்பதையும் தொல்காப்பியத்திற்குப் பின்வந்த உரையாசிரியர்களும் இலக்கணிகளும் தமக்கு முன் இருந்த மரபிலிருந்து தேவையானவற்றைத் தேர்ந்துகொண்டுள்ளனர் என்பதையும் காட்டுகின்றன.
            தொல்காப்பியத்தில் குறிக்கப்பெறாது இளம்பூரணரால் தம் உரையில் இணைத்துக் கொள்ளப்பெற்ற உத்திவகைகளுள் ‘மாட்டேறு’ என்பதும் ஒன்று. மாட்டெறிதலாவது முன்னொரு பொருள் கூறிப்பின்வருவதும் அதுபோலுமென்றல் என்று விளக்கம் கூறியுள்ளார் இளம்பூரணர். நன்னூலுள் மாட்டெறிந்தொழுகல் என்றும் மாறனலங்காரத்தில் ‘மாட்டுறுப்பினவா மனங்கொளக் கூறல் ’ என்றும் இவ்வுத்தி குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கண பரப்பில் இளம்பூரணர் கூறியுள்ள விளக்கத்தைத் தவிர வேறெங்கு இவ்வுத்தி பற்றிய விளக்கங்கள் பதிவானதாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்துள் பயன்படுத்தப் பெற்று, தொல்காப்பியரால் உத்தியாகக் குறிக்கப்பெறாத மாட்டேறு பற்றிய மேல்விளக்கங்களைக் கட்டமைக்க முயல்கிறது இக்கட்டுரை. 
            மனனக் கல்வி முறையைக் கருத்தில்கொண்டே தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் பெரும்பாலும் நுட்பமான சுருங்கிய நூற்பாக்களைக் கொண்டமைந்துள்ளன. பல இடங்களில் முன் நூற்பாவில் குறிக்கப்பெற்ற செய்திகளைத் தொடர்ந்துவரும் நூற்பாவிலும் குறிக்க வேண்டியிருப்பின் முன் நூற்பாவிலுள்ள தொடர்களை அப்படியே எடுத்தாளாமல் ‘அவைதாம் அவற்று…’ போன்ற சொற்சீறடிகளைப் பயன்படுத்தி முன் நூற்பாவோடு பின் நூற்பாவைத் தொடர்புபடுத்தியுள்ள பாங்கினைத் தொல்காப்பியத்துள் காணமுடிகிறது.
            நேரடியாக முந்தய நூற்பாக்களோடு தொடர்புபடுத்தும் இந்த அமைப்பைப் போன்றே மற்றுமொரு அமைப்பையும் தொல்காப்பியத்தில் காணமுடிகிறது. பொருள் இயைபுபடுத்த வேண்டிய நூற்பாக்கள் நேரடியாக முந்தய நூற்பாவாக அமையாமல் அந்நூற்பாவிற்கு முன்னர் சேய்மை இடத்தில் அமைந்தவையாக இருப்பினும் அவையும் பொருள் இயைபு கருதித் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு சேய்மை இடத்திலுள்ள நூற்பாவோடு பொருள் இயைபு கருத்தித் தொடர்புபடுத்ப்பட்ட நூற்பாக்களையே உரையாசிரியர்கள் மாட்டேறு பெறவந்த நூற்பாக்கள் எனக் குறித்துள்ளனர்.
            தொல்காப்பியர் மாட்டேறு என்பதைத் தனி உத்தியாகக் கூறவில்லையெனினும் மாட்டேறு பெறுமாறு பல நூற்பாக்களைத் தம் நூலுள் அமைத்துள்ளார். தொல்காப்பியத்துள் ஒரு இயலுக்குள்ளாகவும் இயல்களைக் கடந்தும் நூற்பாக்கள் மாட்டேறு பெற்றுள்ளன.
(எ-டு)
            ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே (தொல்.எழுத்து.263.இளம்)
            சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே. (தொல்.எழுத்து.279.இளம்)

            விசைமரக் கிளவியும் ஞமையும் நமையும்
            ஆமுப் பெயரும் சேமர இயல. (தொல்.எழுத்து. 283.இளம்.)

            இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே. (தொல்.எழுத்து.314.இளம்.)

இந்நூற்பாக்களில் 314ஆம் நூற்பா 283 ஆம் நூற்பாவோடும் 283ஆம் நூற்பா 279ஆம் நூற்பாவோடும் 279ஆம் நூற்பா 263ஆம் நூற்பாவோடும் 263 ஆம் நூற்பா உதிரமக் கிளவி மெல்லெழுத்து மிகுமே (தொல்.எழுத்து. 244.இளம்.) என்ற நூற்பாவோடும் எனத் தொடர்ச்சியாக ஒன்றன் முன் ஒன்றாக மாட்டேறு பெற்றுள்ளன.
            மற்றொரு முறையாக அளபடைப் பெயரே அளபடை இயல என்ற நூற்பா தொல்காப்பிய சொல்லதிகார விளிமரபினுள் நூற்பா எண்கள் 18,24,32 என்ற மூன்று இடங்களில் வருகிறது. இந்த மூன்று இடங்களும் ஒருங்கே இவைகளுக்கு முன்னர் அமைந்த அளபடை மிகூஉம் இகர இறுதிப்பெயர் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. (தொல்.சொல்.விளி.8.சேனா) என்ற நூற்பாவோடு மாட்டேறு பெற்றுள்ளன. சில நுட்பமான பகுதிகளும் தொல்காப்பியத்துள் மாட்டேறு பெற்றுள்ளன.
            இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
            வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். (தொல்.சொல்.33.சேனா.)

            மன்னாப் பொருளும் அன்ன இயற்றே. (தொல்.சொல்.34.சேனா)
முன்நூற்பாவில் இத்தனை என்று வரையறுக்கப்பட்ட சினைக் கிளவிக்கும் முதற்கிளவிக்கும் வினைப்படுத்துச் சொல்லுமிடத்து உம்மை கொடுத்துச சொல்ல வேண்டும் என்று உரை எழுதியள்ளார் இளம்பூரணர். அடுத்த நூற்பாவில், இல்லாத பொருளும் இடம், காலத்தோடு சேர்த்துக் கூறும்போது அவ்வாறே உம்மை பெறும் என்ற வகையில் உரை எழுதியுள்ளார். உம்மை பெறுதல் ஒப்புமை நோக்கியே முதற் சூத்திரத்தோடு மாட்டெறிந்ததெனக் கொள்க என்றவாறு இளம்பூரணர் உரை எழுதியதன் மூலம் உம்மை பெற்றுள்ளதைத் தவிர வேறு எந்த ஒப்புமையும் இங்கு இல்லை என்பது தெரிகிறது. முற்றும்மை எச்சவும்மையுமாகிய வேறுபாடுடையவேனும் உம்மை பெறுதல் ஒப்புமையால் அன்ன இயற்று என்றார் என்ற சேனாவரையர் உரை மேலும் விளக்கத்தைத் தருகிறது. நுண்ணிய ஒப்புமைகள் கூட மாட்டெறியப்படும் என்பது இதன்வழி புலனாகிறது. இளம்பூரணர், சேனாவரையர் உரைகளில் அமைந்த இவ்விளக்கங்கள் நன்னூலாரை மேற்சொன்ன இரு பொருள்களையும் வேறுவேறாகக் கருதாது,
            இனைத்தென் றறிபொரு ளுலகி னிலாப்பொருள்
            வினைப்படுத் துரைப்பினும்மை  வேண்டும் (நன்னூல். 399)
என ஒரு நூற்பாகவே கொள்ளச் செய்துள்ளது.
            நன்னூலாரும் மாட்டேறு பெறுமாறு சில நூற்பாக்களைத் தம்நூலுள் படைத்துள்ளார். (தாமோதரன், அ., 1999, 126)
            பகுதி விகுதி யிடைநிலை சாரியை
            சந்தி விகார மாறினு மேற்பவை
            முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும்.(நன்னூல் 133)
அல்வழி வேற்றுமைப் புணர்ச்சிக்கு விதித்த தோன்றல் திரிதல் கெடுதலையும் செய்யுட்கு விதித்த ஒன்பது விகாரத்தையும் இப்பதம் பெறும் என மாட்டுதலின் இது மாட்டெறிந்தொழுகல் என்னும் உத்தி என்பதாக நன்னூல் விருத்தியுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ‘மாட்டுதலின் இது மாட்டெறிந்தொழுகல்’ என்னும் தொடர் கவனத்தில் கொள்ளத்தக்கது.
            தொல்காப்பிய செய்யுளியல் முதற்நூற்பாவில் அமைந்த மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின்… (தொல்.பொருள. 310.இளம்.) என்னும் அடி செய்யுள் உறுப்புகள் முப்பத்திநான்கனுள் மாட்டு என்ற ஓர் உறுப்பும்  அடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
            அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
            இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல்
            மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின். (தொல்.பொருள். 511. இளம்.)
நிறுத்த முறையானே மாட்டேறு உணர்த்துதல் நுதலிற்று. இது மேற்கண்ட மாட்டு என்னும் செய்யுளுப்பை விளக்கவந்த நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்துள்ள உரை. இங்கு ‘மாட்டு’ என்ற செய்யுளுறுப்பும் மாட்டேறு என்ற உத்தியும் ஏறத்தாழ ஒன்று என்ற நிலையே இளம்பூரணரது நிலையாகிறது.
            பொருள் கொள்ளுங்கால் அகன்று பொருள கிடப்பச் செய்யினும் அணுகிக் கிடப்பச் செய்யினும் இருவகையானுஞ் சென்று பொருள் முடியுமாற்றான் கொணர்ந்துரைப்பச் செய்தல் என்று மேற்கண்ட நூற்பாவிற்குப் பேராசிரியர் பொருள் கூறியுள்ளார். எடுத்துக்காட்டுகளுக்குப் பின்னர் மாட்டுதலென்பது கொண்டுவந்து கொளுத்துததல் என்று குறித்துள்ளார். இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் பேராசிரியரைத் தழுவியே அமைந்துள்ளது.
            உரையாசிரியர்கள் மாட்டு என்பது செய்யுள் ஒன்றில் பொருள்முடிபு வேண்டி வெவ்வேறு இடங்களில் உள்ள அடிகளை அல்லது தொடர்களைத் தேவையான இடங்களோடு இயைபுபடுத்திப் பொருள் கொள்வதற்குப் பயன்படுத்தும் ஒரு செய்யுளுறுப்பு என்பது தெளிவாகிறது. கிட்டத்தட்ட இதே அடிப்படையில்தான் மாட்டேறு என்ற உத்தியும் இலக்கண நூல்களிலும் இலக்கண உரைகளிலும் பயன்படுத்தப்பெறுகிறது.
மேற்கண்ட இடங்களைக் கவனிக்கும்போது சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அவை
மாட்டு என்னும் செய்யுளுறுப்பிற்கும் மாட்டேறு என்னும் உத்திக்கும் சொல் நிலையிலும் பொருள் நிலையிலும் ஒப்புமை உள்ளதை அறியமுடிகிறது.
இலக்கிய நூலில் பயன்படுத்தப்பெற்ற மாட்டு என்னும் செய்யுளுறுப்பு இலக்கண நூலில் மாட்டேறு என்னும் உத்தியாகப் பரிணமித்துள்ளது எனக் கொள்வதற்கு இடம் உண்டு.
தொல்காப்பியர் காலத்தில் மாட்டு உறுப்பு வழக்கில் இருந்துள்ளது. மாட்டேறு தனி உத்தியாகக் கிளர்ந்துவிட்டது எனக் கூறுவதற்கில்லை.
தொல்காப்பியத்திற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்களும் நன்னூலார் உள்ளிட்ட இலக்கணிகளும் தொல்காப்பியத்திற்கு முன், பின் தோன்றிய மரபுகளிலிருந்து தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டுள்ளனர். இதற்கு மாட்டேறு என்னும் உத்தியும் ஓர் உதாரணம்.
உத்திகள் முப்பத்தியிரண்டு என்ற எண்ணிக்கையில் மாற்றம் இல்லையே தவிர அவை இன்ன இன்ன என்று வரையறுப்பதில் வேற்றுமைகள் உள்ளன. குறிப்பாக, உரையாசிரியர்களிடத்தில் வேற்றுமைகள் காணப்படுகின்றன.
மாட்டேறு என்பதை இளம்பூரணர்தான் முதல் முதலில் உத்திவகையாகத் தமிழ் இலக்கணப் பரப்பில் பதிவு செய்துள்ளார்.
தொல்காப்பிய எல்லையைத் தாண்டி இளம்பூரணரும் நன்னூலாரும் ஒத்துப்போகும் இடங்களில் மாட்டேறு என்பதும் ஒன்று.
           
முடிவுரை
            1. நூற்பாவில் சுட்டப்பட்ட விதியை அல்லது பொருண்மையை ஒரு வரையறை வாய்பாட்டிற்குள் தொகுக்கவும் 2. நூற்பாவோடு தொடர்புடைய பிற செய்திகளை வருவித்துக்கொள்ளவும் 3. நூற்பா உணர்த்தும் பொருளை மேலும் விரிவுபடுத்தி விளக்கவும் என மூன்று நிலைகளில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் உத்திகளைத் தங்கள் உரையினுள் பயன்படுத்தியுள்ளனர்.
            அருத்தாபத்தி, மாட்டேறு முதலான உத்திகள் நூற்பா உணர்த்தும் நுட்பமான பொருளைப் புரிந்துகொள்ளவும் நூற்பாவின் கருத்தை ஐயத்திற்கிடமின்றிப் புரிந்துகொள்ளவும் உரையாசிரியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. அருத்தாபத்தி, மாட்டேறு முதலான உத்திகள் நூற்பா என்னும் ஒரு முழுமை அலகின் அனைத்துவிதமான பொருள் சாத்தியப்பாடுகளையும் அதனைக் கற்கும் மாணவன் தானே சிந்தித்துப் புரிந்துகொள்ள உதவும் ஊக்கிகளாகவும், தவறான பொருள் புரிதலை விலக்கும் உபாயமாகவும் உரையாசிரியர்கள் என்னும் ஆசான்களால் செயல்படுத்தப்பட்டுள்ளன.

துணைநூற் பட்டியல்
1.    அரங்கராசன், ச., 1979. பொருள்கோள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2.    இளங்குமரன், இரா., 1971. உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம் (அகர வரிசை), திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
3.    கிருஷ்ணமூர்த்தி, சா., 1985. உரைச்சொற் களஞ்சியம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.
4.    கோபாலையர், தி.வே., அரணமுறுவல், ந. (ப-ர்), 2003. தொல்காப்பியம் (14 தொகுதிகள்), தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
5.    சதீஸ், அ.,  சங்க இலக்கிய உரைகள், அடையாளம், சென்னை.
6.    சாமிநாதையர், உ.வே., (ப-ர்), 1995. பவணந்தி முனிவரியற்றிய நன்னூல் மூலமும் மயிலை நாதருரையும், மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
7.    தமிழண்ணல், 1985. உரை விளக்கு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
8.    தாமோதரன், அ.,(ப-ர்), பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும் 1999, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

9.    நாச்சிமுத்து, கி., 2007. தொல்காப்பியக் கட்டுரைகள் - சொல், பேராசிரியர் கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கோவை.

Comments

Popular posts from this blog

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்